பீகாரில் தேர்தல் ரூல்ஸில் 17 மாற்றங்கள்.. இனி தப்பு நடக்க சான்ஸே இல்லை.. தேர்தல் ஆணையம் அதிரடி
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். பீகார் தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து விளக்கிய அவர், இந்தத் தேர்தலில் வேட்பாளர்களின் கலர் போட்டோ வாக்குப்பதிவு இயந்திரங்களில் இடம்பெறும் என்றும் கூறினார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
பீகார் மாநிலத்தில் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்குத் தேவையான பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே பீகார் தலைநகர் பாட்னாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

17 மாற்றங்கள்
அப்போது தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார். இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 17 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சில மாற்றங்கள் வாக்கு எண்ணிக்கை சமயத்திலும், சில மாற்றங்கள் பிரச்சாரத்தின் போதும் அமல்படுத்தப்படும் என்றும் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
வாக்குச்சாவடி எண்ணிக்கை
பீகார் மாநிலம் முழுவதும் 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற நிலை உருவாகியுள்ளது. வாக்காளர்கள் எளிதாக வாக்கு செலுத்திட்டுச் செல்வதை உறுதி செய்யவும், வரிசைகளைக் குறைக்கவும் இந்த புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு 1,500 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்று இருந்த நிலையில், அது 1,200ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக 12,817 புதிய வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டு, மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 77,895-லிருந்து 90,712 ஆக உயர்ந்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் கலர் போட்டோ இடம்பெறுமாம். இதுபோல கலர் போட்டோவுடன் வேட்பாளர் விவரம் இடம்பெறும் முதல் மாநிலமாக பீகார் திகழும். தற்போதுள்ள கறுப்பு-வெள்ளை போட்டோ, தேர்தல் சின்னங்கள் தெளிவாக இல்லாததால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
செல்போனுக்கு அனுமதி இல்லை
வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் இனிமேல் எளிதில் அடையாளம் காணும் வகையில் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை அணிவார்கள். வாக்காளர்களிடம் பேசும்போது இந்த அடையாள அட்டையைக் காட்டி அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர்கள் தங்கள் செல்போன்களை வாக்குப்பதிவு மையத்தில் எடுத்துச் செல்லக்கூடாது. போன்களை வாக்குச்சாவடிக்கு வெளியே ஒப்படைக்க வேண்டும் என்றும் இதற்கு வாக்குச்சாவடியில் ஒரு ரூம் ஏற்படுத்தப்படும்
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், பீகாரில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முழுமையான வெப்காஸ்டிங் வசதி செய்யப்படும். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்போது, கடைசி இரண்டு சுற்றுகளுக்கு முன்பே தபால் வாக்குகள் முழுமையாக எண்ணப்படும் என்றும் அவர் கூறினார்.
பீகார் தேர்தல்
மேலும், பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் நவம்பர் 22ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.. இதில் 2 தொகுதிகள் பழங்குடியினருக்கும், 38 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்கு முன்பே தேர்தல்கள் நடத்தப்படும்












Click it and Unblock the Notifications