என்ன கொடுமை.. இறந்தவரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரதரவென இழுத்துப் போன போலீஸ்!
வைஷாலி, பீகார்: பீகார் மாநிலம் வைஷாலி நகரில் ஆற்றில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்ட போலீஸார், அந்த நபரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரையோடு தரையாக இழுத்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைஷாலி நகரில் உள்ள கங்கையாற்றில் மூழ்கி ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீஸார் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் இறந்த நபரின் கழுத்தில் பெரிய கயிற்றைக் கட்டி கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்திற்கு உடலை இழுத்துச் சென்றனர். இதை அங்கு கூடியிருந்த மக்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
இத்தனைக்கும் ஆற்றில் அந்த நபர் விழுந்ததுமே போலீஸாருக்குத் தகவல் போனது. ஆனால் போலீஸார் 2 மணி நேரம் கழித்துத்தான் வந்துள்ளனர். இதனால் ஆற்றில் மூழ்கிய நபரைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. லேட்டாக வந்ததோடு, உடலை கயிற்றைக் கட்டி போலீஸார் இழுத்த செயல் அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸ் கிடைக்காததாலும், உடலைத் தூக்கிச் செல்ல ஆட்கள் கிடைக்கவில்லை என்பதாலும் இப்படி கயிற்றைக் கட்டி இழுத்து தங்களது மனிதாபிமானமற்ற வெளிக்காட்டியுள்ளனர் அந்த போலீஸார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து தற்போது இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில்தான் ஒடிஷா மாநிலத்தில் ஒரு கணவர் தனது இறந்த மனைவியின் உடலை தோலில் தூக்கி வைத்துக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து அது போன்ற மேலும் சில சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் இறந்தவரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்து சலசலப்பை அதிகரித்துள்ளனர் பீகார் போலீஸார்.