சிபிஐ துறைக்கு இடமாற்றம்... மகிழ்ச்சியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட பீகார் போலீஸ்
சிபிஐ துறைக்கு இடமாற்றம் கிடைத்த மகிழ்ச்சியில் பிரிவு உபசார விழாவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் பீகார் போலீஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
பாட்னா: பீகார் மாநில போலீஸ் அதிகாரி ஒருவர் தான் மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட பிரிவு உபசார விழாவில் வானத்தை நோக்கி தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயரதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 27-ஆம் தேதி 70 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பதவிகளை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. கட்டிஹார் மாவட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் சித்தார்த் மோகன் ஜெயின். இவருக்கும் மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றல் கிடைத்தது.

வானத்தில் டுமீல் டுமீல்
இதையடுத்து அவருக்கு கட்டிஹாரில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது சந்தோஷமாக ஆட்டம் பாட்டம் என ஜெயின் இருந்தார். அப்போது திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார்.

சமூக வலைதளங்கள்
துப்பாக்கியில் உள்ள தோட்டாக்கள் தீரும் வரை சுட்டுக் கொண்டே இருந்தார். இந்த அசம்பாவித சம்பவத்தால் அவ்வழியாக சென்றோர் மிகவும் அச்சமடைந்தனர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

விசாரணைக்கு உத்தரவு
இதன்பின்னர் தகவலறிந்த பீகார் மாநில கூடுதல் டிஜிபி எஸ்.கே சிங்கால், ஜெயினை மத்திய அரசுக்கு மாற்றம் செய்யும் உத்தரவை திரும்ப பெற்று கொண்டார். மேலும் துப்பாக்கியை அபாயகரமான வகையில் பயன்படுத்தியமை குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
|
நடவடிக்கை உண்டு
இதுகுறித்து சிங்கால் கூறுகையில், என்னதான் மகிழ்ச்சியில் திளைத்தாலும் சித்தார்த் மோகன் ஜெயின் செய்ததை ஏற்க முடியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை மத்திய அரசு பணிக்கு அவரை மாற்றும் உத்தரவும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications