நிதிஷ்குமாரை காலி செய்யும் தேஜஸ்வி.. ஆனால் கடைசியில் பெரிய ட்விஸ்ட்! பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு
பாட்னா: பீகார் மாநிலத்தில் சில மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே பீகார் தேர்தல் தொடர்பாக இரு முக்கிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும், யார் விரும்பிய முதல்வர் வேட்பாளர்கள் என்பது குறித்த கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில்களைக் கவனித்தால் அங்குள்ள அரசியல் களம் நமக்குப் புரிகிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில், அங்குத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

பீகார் சர்வே
இதற்கிடையே தேர்தல் நெருங்கும் சூழலில், புதிய கருத்துக் கணிப்புகள் முடிவுகள் வெளியாகியுள்ளது. பீகாரில் சார் பிராசஸ் முடிந்து, சமீபத்தில் தான் வாக்காளர் பட்டியல் வெளியாகியிருந்தது. இந்தச் சூழலில் இப்போது இரு கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த சர்வேயில் நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அப்போது தான் போட்டி எந்தளவுக்குக் கடுமையாக இருக்கிறது என்பது புரியும்.
SPICK மீடியா நெட்வொர்க் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சி தக்கவைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. என்டிஏ 46% வாக்குகள் பெற்று, சுமார் 158 இடங்களை வெல்லும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மறுபுறம், எதிர்க்கட்சிகளின் மகா பந்தன் கூட்டணி 41% வாக்குகளுடன் 66 இடங்களை மட்டுமே பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
யாருக்கு எவ்வளவு சீட்?
பிசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி 8% வாக்குகளைப் பெற்று, வாக்கு வங்கி அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும். இருப்பினும், அந்தக் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பிஎஸ்பி, மஜ்லீஸ் கட்சிகள் பிரசாந்த் கிஷோர் கட்சியை விடக் குறைவான வாக்குகளைப் பெற்றாலும் கூட, பிஎஸ்ஜி ஒரு இடத்திலும் மஜ்லீஸ் கட்சி 4 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜஸ்வி யாதவ்
அடுத்து முதல்வர் பதவியில் யார் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு வந்த பதிலே சுவாரசியமாக இருக்கிறது. அதிகபட்சமாக 30.5% பேர் தேஜஸ்வி யாதவை ஆதரித்தனர். அதேசமயம் 27.4% பேர் நிதிஷ் குமாரை ஆதரித்தனர். 13% ஆதரவோடு பிரஷாந்த் கிஷோர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து அடுத்த இடத்தில் சிராக் பாஸ்வான் 12% ஆதரவோடு இருக்கிறார். அதாவது கட்சி ரீதியாக என்டிஏ முன்னணியில் இருந்தாலும் தேஜஸ்வி யாதவுக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது.
அதேபோல JVC என்ற இன்னொரு அமைப்பு நடத்திய சர்வே முடிவுகளும் வெளியாகியுள்ளது. அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 131 முதல் 150 இடங்களைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மகாகத்பந்தன் 81 முதல் 103 இடங்களைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பிரசாந்த் கிஷோரின் ஜன சராஜ் கட்சி 4 முதல் 6 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் போட்டி
முதல்வர் பதவிக்கு யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு இதில் கடும் போட்டி நிலவுகிறது. ஜேவிசி சர்வேயில் 27% வாக்குகளுடன் நிதிஷ் குமார் முதலிடத்தில் இருக்கிறார். அதேநேரம் தேஜஸ்வி யாதவ் மிக அருகிலேயே 25% வாக்குகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார். பிரஷாந்த் கிஷோர் 15%, சிராக் பாஸ்வான் 11%, சம்ராட் சவுத்ரி 8% ஆதரவோடு அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.
அதாவது கட்சி ரீதியாகப் பார்த்தால் பாஜக கூட்டணியே முன்னணியில் இருக்கிறது. அதேநேரம் தேஜஸ்வி யாதவுக்கு அங்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் அங்குப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது. எனவே, கடைசிக் கட்ட பிரச்சாரத்தைப் பொறுத்தே அங்கு வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும் எனத் தெரிகிறது.











Click it and Unblock the Notifications