ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சொல்கிறபடியெல்லாம் ஆடும் பா.ஜ.க.: சோனியா தாக்கு
மொரதாபாத்: மக்களை பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சொல்கிறபடியெல்லாம் ஆடுகிறது பாரதிய ஜனதா கட்சி என்று காங்கிரஸ் தலைவர் சோனியா விமர்சித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசியதாவது:

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி.. மகாத்மா காந்தி, மவுலானா ஆசாத் போன்ற பெரிய தலைவர்களின் கொள்கைகளையும், அவர்கள் செய்த சேவைகளையும் பின்பற்றி மக்களுக்காக பாடுபடுகிறது. இதை மக்களும் அறிவார்கள்.
ஆனால் இதற்கு நேர் மாறாக, சமுதாயத்தில் பிரிவினையை தூண்டும் கொள்கை கொண்ட அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சொல்கிறபடியெல்லாம் பாரதிய ஜனதா கட்சி ஆடுகிறது. ஆனால் அவர்களால் உங்களை தவறாக வழிநடத்த முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அவர்களை நீங்கள் தோற்கடிக்க வேண்டும். மத்தியில் நிலையான, வலிமையான அரசு அமைய வேண்டும். அப்படிப்பட்ட அரசை காங்கிரஸ் கட்சியால்தான் அமைக்க முடியும்.
பாரதிய ஜனதாவின் கொள்கைகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகத்தான் அமையும். உத்தரபிரதேச மாநிலத்துக்கு மத்திய அரசு ஏராளமான நிதிஉதவி வழங்கியது.
ஆனால் அதை பயன்படுத்தி கிராமங்களுக்கு போதிய மின்சார வசதி செய்து கொடுக்க சமாஜ்வாடி அரசு தவறிவிட்டது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதியின்படி மக்களுக்கு இலவசமாக சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும், வேலைவாய்ப்பு பெறும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications