நெருக்கடி நிலைக்காக காங். மன்னிப்பு கேட்க வேண்டும்- மோடியை விமர்சிக்கவில்லை: அத்வானி
டெல்லி: நெருக்கடி நிலை மீண்டும் வராது என்று கூற முடியாது என்ற கருத்தை எந்த தனிநபரையும் மனதில் வைத்து கூறவில்லை. காங்கிரசை நினைத்துத்தான் கூறினேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி விளக்கம் அளித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் நெருக்கடி நிலை மீண்டும் வராது என்று கூற முடியாது எனக் கூறியிருந்தார். தலைமைப்பண்பு பற்றியும் சில கருத்துகளை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை மனதில் வைத்துத்தான் அத்வானி அந்த கருத்தை தெரிவித்ததாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையில் அத்வானி தம்முடைய பேட்டிக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், நெருக்கடி நிலை மீண்டும் வராது என்று கூற முடியாது என்று நான் தெரிவித்த கருத்து, எந்த தனிநபரையும் குறிவைத்து கூறப்பட்டது அல்ல. காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்துத்தான் அந்த கருத்தை தெரிவித்தேன்.
நெருக்கடி நிலையை அமல்படுத்தியதற்காக அந்த கட்சி இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் தலைமை நெருக்கடி நிலைக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் எல்லாவகையான சர்வாதிகாரத்தையும் எதிர்க்கிறேன். ஆணவம்தான் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கிறது.
இன்றைய தலைவர்கள், வாஜ்பாய் மாதிரி அடக்கமானவர்களாக திகழ வேண்டும்.
பணம் சம்பாதிப்பவர்கள், அதை இழக்க விரும்பாததைப் போலவே, பதவிக்கு வருபவர்களும் அதை இழக்க விரும்புவது இல்லை. ஆனால், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள்.
ஜனநாயகத்தை பாதுகாக்க இப்போதைய தேவை அரசியல்சட்ட பாதுகாப்பு அம்சங்கள் அல்ல. பதவியில் இருப்பவர்களின் அரசியல் உறுதிப்பாடுதான். அது இல்லாததுதான் கவலை அளிக்கிறது.
இவ்வாறு அத்வானி கூறினார்.