கொரோனா வந்தால்...மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று கூறிய...பாஜக தலைவருக்கு கொரோனா!!
கொல்கத்தா: தனக்கு கொரோனா வந்தால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டி பிடிப்பேன் என்று கூறி இருந்த பாஜக தேசிய செயலாளராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அனுபம் ஹஸ்ராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் அனுபம், ''எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு மூச்சு திணறல் வந்ததையடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப் பிடிப்பேன் என்று கூறிய இவர்மீது மேற்குவங்க போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நான் மம்தாவை கட்டிப்பிடிப்பேன்.. பாஜக தேசிய செயலாளர் சர்ச்சை பேச்சு
2019ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்து இருக்கும் அனுபம் கடந்த ஞாயிற்றுக் கிழமை போல்பூரில் பேசுகையில், ''எனக்கு என்றாவது ஒரு நாள் கொரோனா தொற்று ஏற்பட்டால், மம்தா பானர்ஜியை கட்டிப் பிடிப்பேன். அப்போதுதான் கொரோனாவில் தனது சொந்த பந்தங்களை இழந்தவர்களின் வலி அவருக்குத் தெரியும்'' என்று தெரிவித்து இருந்தார்.
தேசிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருந்த மறுநாளே அனுபம் இவ்வாறு கூறி இருந்தார். இதற்கு பெரிய அளவில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதற்கு பாஜக துணைத் தலைவர் முகுல் ராய் அளித்திருந்த பதிலில், ''பேசுவதற்கு முன்பு என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்'' என்று எச்சரித்து இருந்தார்.