அரசு டாக்டரை தாக்கிய குஜராத் பாஜக எம்.பிக்கு 3 வருட சிறை
காந்திநகர்: அரசு மருத்துவமனை டாக்டரை தாக்கிய வழக்கில், பாஜக எம்.பி. நரன்பாய் கச்சாடியாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத்தின் அம்ரேலி லோக்சபா தொகுதியில் இருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நரன்பாய் கச்சாடியா. 2013 ஜனவரி 1ம் தேதி, அம்ரேலி சிவில் மருத்துவமனையில், பாஜக தொண்டர் ஒருவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வலியுறுத்தி டாக்டருட் நரன்பாய் மோதலில் ஈடுபட்டார்.

அப்போது, டாக்டர் பிம்ஜிபாய் தாபியை நரன்பாய் அடித்துள்ளார். டாக்டர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதால், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தாக்கிய சட்டப்பிரிவின் கீழ் மட்டுமின்றி, வன்கொடுமை சட்டத்தின்கீழும் நரன்பாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், வன்கொடுமை பிரிவின்கீழ் செய்த வழக்குப்பதிவை ரத்து செய்தபோதிலும், அரசு ஊழியரை தாக்கியது தொடர்பான சட்டத்தின்கீழ், நரன்பாய்க்கு 3 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ.35 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ஹைகோர்ட்டில் அப்பீல் செய்ய அவகாசம் தர வசதியாக, சிறை தண்டனையை 1 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது கோர்ட். 2013ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட் வழக்கிய தீர்ப்பின் அடிப்படையில், பாஜக எம்.பியின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications