கடவுள் ராமனாலும்கூட பலாத்காரங்களைத் தடுக்க முடியாது- பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து!
கடவுள் ராமனாலும்கூட பலாத்காரங்களைத் தடுக்க முடியாது பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: கடவுள் ராமனால் கூட பாலியல் பலாத்கார சம்பவங்களைத் தடுக்க முடியாது என்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உன்னவ் பாலியல் பலாத்காரம் சம்பவம் குறித்து, உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநிலத்தில் உன்னவ் போன்ற பலாத்கார சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாது. கடவுள் ராமன் மீண்டும் பூமிக்கு அவதரித்து வந்தால் அவரால்கூட பலாத்கார சம்பவங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. பாலியல் பலாத்காரங்களை அரசியலமைப்புச் சட்டத்தால்கூட அதிக அளவில் கட்டுப்படுத்த முடியாது. பாலியல் பலாத்காரங்களை கடுப்படுத்த வேண்டுமானால், சமுதாயத்தில் நல்ல மதிப்பீடுகளை ஊக்குவிப்பதன் மூலமே கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
சுரேந்திர சிங்கின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை கருத்துகளுக்குப் பேர்போன சுரேந்திர சிங், இதற்கு முன்பு, தாஜ்மஹாலை ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ராவணனின் தங்கை சூர்ப்பணகையுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.