பாஜகவுக்கு 300 இடங்களுக்கு மேல் வெற்றி... 3வது அணிக்கு தோல்வி: வெங்கையா நாயுடு ஆருடம்
பெங்களூர்: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக முந்நூறுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும், அதேசமயம் மூன்றாவது அணி தோல்வியைத் தழுவும் என கருத்துத் தெரிவித்துள்ளார் பாஜக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடு.
பா.ஜ.க சார்பில் பெங்களூர் வடக்கு தொகுதி மாநாடு மல்லேசுவரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அம்மாநாட்டை அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாடெங்கும் வீசும் மோடி அலையால் நிச்சயமாக நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். வாக்காளர்களின் மனநிலை மாறியிருக்கிறது.
மேலும், 3-வது அணி சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றார்போல் கூட்டணி அமைத்துக்கொள்கிறது. இது ஒரு தோல்வி அடையும் முயற்சி ஆகும். அதில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிரதமர் பதவியை விரும்புபவர்கள். இந்த அணிக்கு எந்த இலக்கும் கிடையாது. இதனால் 3-வது அணியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அந்த அணி தோல்வி அடைவது உறுதி' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.