கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதாக நூதன மோசடி! பெங்களூருவில் 5 பேர் கைது
பெங்களூரு: கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதாக கூறி, பணம் பறித்த மோசடி கும்பலை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவை சேர்ந்த ரவிகிரண் என்பவரை சமீபத்தில் புதுச்சேரியை சேர்ந்த ராஜன் மற்றும் வேலூரை சேர்ந்த ஜெயகுமார் ஆகியோர் அணுகி, தங்களிடம் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் இருப்பதாகவும், அதை வெள்ளையாக மாற்ற உதவும் படியும் கேட்டுள்ளனர்.

அவர்கள் கூறிய ஐடியா இதுதான்: கருப்பு பணத்தை சிறு சிறு டிரஸ்டுகளில் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறோம். அந்த டிரஸ்டுக்கு நாங்கள் அளிக்கும் பணத்தில் 75 சதவீதத்தை எங்களுக்கே திருப்பி தாருங்கள். 15 சதவீதத்தை அந்த டிரஸ்டுக்கும், 10 சதவீதத்தை தரகர் கமிஷனாக நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஐடியா கொடுத்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக தயாரித்த சில போலி ஆவணங்களையும் ரவிகிரணிடம் காண்பித்துள்ளனர். பணத்தை தர வேண்டும் என்றால், சில பிராசசிங் வேலைகள் உள்ளன. அதற்கு தேவைப்படும் செலவீனங்களை நீங்கள் தர வேண்டும் என்று ரவிகிரணிடம் இவர்கள் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ரவிகிரண், பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை பரிசீலித்த குற்றப்பிரிவு போலீசார், குற்றவாளிகளை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர். அவர்கள் கொடுத்த யோசனைப்படி ஜெயநகரிலுள்ள பவித்ரா என்ற என்ற ஹோட்டலுக்கு கருப்பு பண பார்ட்டிகளை வரச்சொன்னார் ரவிகிரண். இதை நம்பி ராஜன், ஜெயகுமார் மற்றும் கூட்டாளிகளான ஆந்திராவை சேர்ந்த அல்டாப், சீனிவாஸ் மற்றும் ஸ்ரீநிவாசலு ஆகியோரும் ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.
அங்கு மறைந்திருந்த குற்றப்பிரிவு போலீசார் கருப்பு பண போலிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர். ஏற்கனவே இந்த கும்பல் சென்னை மற்றும் பெங்களூருவில் சிலரிடம் பிராசசிங் பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகிவிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications