காஷ்மீர் தால் ஏரியில் திடீரென கவிழ்ந்த படகு.. மீன்பிடிக்க போன தந்தை - மகனுக்கு தத்தளிப்பு- வீடியோ
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் மீன்பிடிக்க சென்ற தந்தை - மகன் படகில் சென்றனர். அப்போது சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் படகு திடீரென்று கவிழ்ந்த நிலையில் இருவரும் ஏரிக்குள் விழுந்து உயிருக்கு தத்தளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் புகழ்பெற்ற தால் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுற்றுலா தலமாக உள்ளது. பொதுமக்கள் இந்த ஏரியில் சுற்றுலா படகில் பயணிப்பது வழக்கமான ஒன்றாகும். அதேபோல் உள்ளூர் மக்களும் இந்த ஏரியில் மீன்பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இன்று மதியம் ஸ்ரீநகரில் உள்ள ரெய்னாவாரி பகுதியை சேர்ந்த முகமது சுல்தான் கோஷா மற்றும் அவரது மகன் அப்துல் மஜீத் கோஷா ஆகியோர் படகில் மீன்பிடிக்க சென்றனர்.
இந்த சமயத்தில் பயங்கர சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அவர்களின் படகு நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. படகில் இருந்த அப்துல் மஜீத் கோஷா மற்றும் முகமது சுல்தான் கோஷா ஆகியோர் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். ஏரியாக இருந்தாலும் கூட சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக ஏரி கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இதனால் அவர்களால் நீந்தி வெளியே வர முடியவில்லை. இதையடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் படகில் சென்று ஏரியில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அப்துல் மஜித் கோஷாவை மீட்பு படையினர் மீட்டனர். மாறாக முகமது சுல்தான் கோஷாவை அவர்களால் மீட்க முடியவில்லை. அவர் தண்ணீரில் மூழ்கினார். அவரை தேடும் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டனர். இருப்பினும் அவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே தான் தால் ஏரியில் அப்துல் மஜித் கோஷா தத்தளிப்பதும், அவரை மீட்பு படையினர் சிரமப்பட்டு மீட்பதையும் கரையில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
Boat capsized in Srinagar's Dal Lake due to strong gusty winds. #dallake pic.twitter.com/miXvGGv4OU
— Nantha Kumar (@Nanthakumarrnk) May 2, 2025












Click it and Unblock the Notifications