3,000 கன அடிநீர் திறப்பு உத்தரவை கர்நாடகா, தமிழகம் ஏற்கவில்லை- மேற்பார்வை குழு தலைவர் சசிசேகர்
டெல்லி: 10 நாட்களுக்கு 3,000 கன அடிநீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை கர்நாடகா, தமிழகம் ஏற்கவில்லை; தேவையானால் 2 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று மேற்பார்வைக் குழுவின் தலைவர் சசிசேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை செயலர் சசிசேகர் தலைமையில் இன்று காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடகா அரசு தரப்பு வாதிட்டது.

ஆனால் சம்பா சாகுபடிக்கு 64 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என்று தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பின்னர், வரும் 21-ந் தேதி முதல் 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்பார்வை குழு தலைவர் சசிசேகர், 3,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட்டதை கர்நாடகாவும் தமிழக அரசும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆகையால் தேவைப்பட்டால் 2 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாசன தேவை, கர்நாடகா நீர் இருப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30-ந் தேதிக்கு பின்னர் நிலைமைகளை ஆராய்ந்து மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications