போட்டோக்கு போஸ்... ரயிலின் மின்சாரக் கம்பியைப் பிடித்த 10ம் வகுப்பு மாணவன் பலி
டெல்லி: டெல்லியில், செல்போனில் போட்டோ எடுப்பதற்காக விளையாட்டுத் தனமாக சரக்கு ரயிலின் மீதேறி மின்சாரக் கம்பியைப் பிடித்த பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாகப் பலியானான்.
நேற்று மாலை 4 மணியளவில், தென்மேற்கு டெல்லியின், நாரைய்னா ரயில் நிலையத்திற்கு தன் நண்பர்களுடன் வந்துள்ளான் ஹிமான்ஷூ என்ற பத்தாம் வகுப்பு மாணவன். விளையாட்டுத் தனமாக அங்கிருந்த சரக்கு ரயிலின் மீதேறி,மின்சாரக் கம்பியை பிடிக்க முயற்சி செய்துள்ளான் ஹிமான்ஷூ. அதனை தனது நண்பனிடம் செல்போனில் போட்டோ எடுக்கச் சொல்லியுள்ளான்.
மின்சாரக் கம்பியைத் தொட்ட ஹிமான்ஷூ, மின்சாரத்தால் தாக்கப் பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளான். மாணவரொருவன் அடிபட்டுக் கீழெ கிடக்கும் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடனடியாக அச்சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஹிமான்ஷூ பரிதாபமாக உயிரிழந்தான். அதனைத் தொடர்ந்து அவனது நண்பர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் அன்றைய தினம் பள்ளிக்கு செல்லாததும், ஏணியின் உதவி கொண்டு ரயிலின் மீதேறி மின்சார கம்பியைத் தொட ஹிமான்ஷூ முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், தான் மின்சாரக் கம்பியைத் தொட்டவாறு கம்பீரமாக போஸ் தருவதை செல்போனில் போட்டோ எடுக்க ஹிமான்ஷூ சொன்னதாகவும், ஆனால், கம்பியைத் தொட்ட ஹிமான்ஷூ கீழே விழுந்ததாகவும் அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை ஹிமான்ஷூவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட உள்ளது. சிறுவன் ஒருவன் ரயிலின் மீதேறுவதைக் கூட கவனிக்காமல் அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் எவ்வாறு அஜாக்கிரதையாக இருந்தனர் என போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications