இந்தியாவிலும் குழந்தைகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு 'ஆண்மை நீக்கம்' தண்டனை அமலாகுமா?
டெல்லி: குழந்தைளை பலாத்காரத்துக்குள்ளாக்கும் கொடியவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. குழந்தைகளை பலாத்காரம் செய்யும் காமுகர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த காட்டமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் குழந்தைகள் மீதான பலாத்கார சம்பவங்களை ஒப்பிடுகையில் ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் எவ்வளவு தூரம் சாத்தியமானது என்கிற கேள்வி எழவே செய்யும். ஏனெனில் இந்தியாவில் 2009ஆம் ஆண்டு குழந்தைகள் மீதான பலாத்கார வழக்குகள் என்பது 5,484. 2014ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 13,766 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 150% அதிகரித்துள்ளது.

ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் என்பது 1996ஆம் ஆண்டு கலிபோர்னியாவில்தான் முதல் முறையாக அமலாக்கப்பட்டது. குழந்தைகளை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கான தண்டனையாக இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முறையின் மூலமாக அந்த குற்றவாளியினது பாலுணர்வு வேட்கை என்பதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
அதே நேரத்தில் இதுமட்டுமே இத்தகைய குற்றங்களுக்கு ஒரு தீர்வாகவும் இருக்கப் போவதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் நிர்பயா பலாத்கார வழக்கைத் தொடர்ந்து பலாத்கார வழக்குகளிலும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இருப்பினும் இந்தியாவில் பல பொய்யான பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்படுவதையும் கவனத்தில் கொள்ளப்பட்டு பலாத்காரம் மற்றும் கொலை நிகழ்ந்தால் மரண தண்டனை விதிக்கப்பட வகை செய்யப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் ரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ப்ளோரிடா, ஜார்ஜியா, லூசியானா, டெக்ஸாஸ் என பல மாகாணங்களிலும் இது பின்பற்றப்பட்டது. அனைத்து இடங்களிலும் ஒரு நபர் 2-வது முறையாக குழந்தைகள் மீதான பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டோருக்கு திருந்துதலுக்கான ஒரு வாய்ப்பு முகாம்களில் வைத்து அழங்கப்படுகிறது.
இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் 2010ஆம் ஆண்டுதான் கடைசியாக ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் என்ற தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 60 வயது முதியவர் ஒருவர் தனது பேத்திகளை பலாத்காரம் செய்ததற்காக இத்தண்டனை வழங்கப்பட்டது. நாடுகளைப் பொறுத்தவரையில் இஸ்ரேல், அர்ஜெண்டினா, தென்கொரியா, ரஷ்யா ஆகியவை ரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனையை சட்டப்பூர்வமாக்கி உள்ளன.
இந்தியாவில் பலாத்காரத்துக்கு தண்டனை வழங்கும் ஐபிசி 376-வது பிரிவின் ஒருபகுதியான ரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனையை சேர்க்கலாம். அதுவும் குழந்தைகள் மீதான பலாத்காரத்துக்கான தண்டனையாகவும் குறிப்பிட வேண்டும். அப்படி ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்யும் போதுதான் அந்த குற்றவாளிகளின் பாலுணர்வுத்தன்மை அகலும் என்பதும் ஒரு கருத்தாக முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications