ஜெ.வின் ரூ.100 கோடி அபராதத் தொகை கர்நாடாக வசூலிக்க முடியுமா? - ஏப்.5ல் விடை தெரியும்
ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத் தொகையை கர்நாடகா அரசு வசூலிக்க முடியுமா என்பது பற்றி ஏப்ரல் 5ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் தெரிவிக்க உள்ளது.
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத் தொகையை வசூலிப்பது குறித்த கர்நாடக அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து ஏப்ரல் 5ஆம் பிற்பகல் 1.40 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு எடுக்க உள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.

தண்டனையும் அபராதமும்
பெங்களூரு நீதிமன்றம் அளித்த தண்டனை மற்றும் அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கு தலா ரூ.4 கோடியும் அபராதமாக விதித்திருந்தது.

ரூ.100 கோடி அபராதம்
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு விதித்த ரூ.100 கோடி அபராதத் தொகையை வசூலிக்கும் முறை குறித்து தெளிவான உத்தரவு இடம்பெறவில்லை என்று கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடகா அரசு மனு
அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற விதிகளின்படி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட பிறகு குற்றம்சாட்டப்பட்டவர் இறந்தாலும் அவருக்கான தண்டனையை அறிவிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றம்
சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் தண்டனையும், 100 கோடிரூபாய் அபராதத்தையும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்துள்ளது. அதன்படி, ஜெயலலிதாவுக்கான தண்டனையையும், அபராதத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

அபராதம் வசூலிக்க வேண்டும்
சிறை தண்டனையை அனுபவிப்பதற்கு ஜெயலலிதா உயிருடன் இல்லை. அதே நேரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் அவருடைய சொத்துக்கள் மூலம் அபராதத் தொகையான 100 கோடி ரூபாயை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்ற அந்த சீராய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 5ல் தெரியவரும்
ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள், பினாகி சந்திர கோஸ், அமித்தவ ராய் ஆகியோர், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளலாமா என, வரும், ஏப்ரல் 5ஆம் பிற்பகல் 1.40 மணிக்கு தங்களுடைய அறையில் விசாரிக்க உள்ளனர். ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை கர்நாடகா அரசு வசூலிக்க முடியுமா? எப்படி வசூலிக்க உத்தரவிடுவது என்று அன்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணைக்குப் பிறகு தெரியவரும்












Click it and Unblock the Notifications