காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் கர்நாடகா
பெங்களூர்: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடும் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மறுசீராய்வு மனுவை இன்று தாக்கல் செய்யும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தீர்ப்பை ஏற்று கர்நாடகா தமிழகத்திற்கு நீர் திறந்துவிட்டுள்ளது. இதற்கிடையே பெங்களூரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறுகையில்,
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவது சட்டத்திற்கு எதிரானது என்பதால் நீரை திறந்துவிடுவது என்று தீர்மானித்துள்ளோம். இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் மைசூர், மாண்டியா, பெங்களூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாத நிலையில் தான் தமிழகத்திற்கு நீரை திறந்துவிட உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து புதன்கிழமை மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்வோம். மேலும் இது பற்றி காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் முறையிடவும் முடிவு செய்துள்ளோம்.
கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்திற்கு 94 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும். ஆனால் மழை சரியாக பெய்யாததால் 33 டி.எம்.சி. திறந்துவிட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications