காவிரி வழக்கில் இனி கர்நாடக வக்கீல் கபில் சிபல்? மாஜி மத்திய அமைச்சர் முடிவால் தமிழகம் அதிர்ச்சி
டெல்லி: காவிரி வழக்கில் கர்நாடகா சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் வழக்கறிஞராக ஆஜராகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி வழக்கில் இதுவரை கர்நாடகாவுக்காக ஃபாலி நாரிமன் வாதிட்டு வந்தார். ஆனால் சமீபத்தில் சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக கர்நாடக அரசு முடிவுகள் எடுத்து வந்ததால் அவர் அதிருப்தியடைந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கோர்ட்டில் வழக்கு வந்தபோது, தான் வாதிட முடியாது என கூறி அமர்ந்துவிட்டார். இதனால் கர்நாடக அரசும், அதன் மக்களும் அதிர்ச்சியடைந்தனர். நாரிமனை நீக்க போராட்டங்கள் வலுப்பெறுகின்றன.
இதையடுத்து மூத்த வழக்கறிஞரான கபில் சிபலை அணுகியுள்ளது கர்நாடக தரப்பு. வரும் 6ம் தேதி மீண்டும் கேஸ் கோர்ட்டுக்கு வரும்போது கபில் சிபலை ஆஜராக கேட்டுக்கொண்டுள்ள கர்நாடக அரசு, அதற்கு தேவையான ஆவணங்களை கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கபில் சிபல் கடந்த மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காங்கிரஸ் மேலிட தலைவர் திக்விஜயசிங், பகிரங்கமாகவே தமிழகத்தை குறை கூறி, கர்நாடகாவுக்கு ஆதரவாக பேட்டியளித்த நிலையில், மற்றொரு காங்கிரஸ் தலைவரும் கர்நாடகாவுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டிலேயே வாதிட ரெடியாகிவருகிறார். இவர்களது நிலைப்பாடு நீதிமன்ற நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் காங்கிரஸ் தலைமை இதுபோன்ற அரசியல் பிரமுகர்களை வாதிட அனுமதிக்க கூடாது என்பது தமிழக விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.
அதேநேரம், காவிரி தொடர்பான மூல வழக்குகளில் நாரிமனே தொடர்ந்து ஆஜராவார் என்று கூறப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா தொடர்ந்துள்ள முக்கிய வழக்கு இம்மாதம் 18ம் தேதி விசாரிக்கப்படுகிறது. அதில் நாரிமனே ஆஜராவாராம்.












Click it and Unblock the Notifications