”ரயில் நீர்” விற்பனையில் ஊழல் - அதிரடி சோதனை நடத்தி ரூ.27 கோடியை கைப்பற்றியது சி.பி.ஐ; 2 அதிகாரிகள்
டெல்லி: வடக்கு ரயில்வேயில் அதி விரைவு ரயில்களில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ததில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, அதில் சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளின் வீடுகள், தனியார் நிறுவனங்கள் உள்பட 13 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூபாய் 27 கோடியை சி.பி.ஐ அதிகாரிகள் கைப்பற்றினர். இதனையடுத்து 2 ரயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது ரயில்வே துறை.
ரயில் நிலையங்களில் இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் முறைகேடு நடப்பதாக சி.பி.ஐக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக டெல்லி, நொய்டாவில் நேற்று 7 தனியார் நிறுவனங்கள் மற்றும் வடக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத ரூபாய் 27 கோடி சிக்கியது. இதனையடுத்து ஊழல் தொடர்பாக வடக்கு ரயில்வேயின் முன்னாள் தலைமை வர்த்தக மேலாளர்கள் சாலியா, சந்தீப் சிலாஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும், 7 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் ரயில்வே நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறை செய்தித் தொடர்பாளர் தேவ்பிரீத் சிங், "வட மாநிலங்களில் இயக்கப்பட்டுவரும் ராஜதானி, ஷதாப்தி விரைவு ரயில்களில், ரயில்வே நிர்வாகத்தால் "ரயில் நீர்" என்ற பெயரில் தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த ரயில்களில் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீரை ஆர்.கே அசோசியேட், சத்யம் கேட்டரர்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன.
தனியார் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படும் ரயில் குடிநீர் பாட்டில்கள் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்ததால், இந்திய ரயில்வே உணவு விநியோகம் மற்றும் சுற்றுலா நிறுவனம் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தது. இதையடுத்து, "ரயில் நீர்" பாட்டில்கள் விரைவு ரயில்களில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
இருப்பினும், ரயில்வே துறை தலைமை வணிக மேலாளர்கள் எம்.எஸ்.சாலியா, சந்தீப் சிலாஸ் ஆகியோரின் உதவியுடன் ரயில் குடிநீர் அல்லாத மலிவான விலையில் வெளிச்சந்தையில் கிடைக்கும் குடிநீர் பாட்டில்களை விரைவு ரயில்களில் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து வந்துள்ளது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரிகள் 2 பேரின் வீடுகளிலும், தனியார் நிறுவன அலுவலகங்கள், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரூபாய் 27 கோடியும், குற்ற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications