ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் துணை குற்றப்பத்திரிக்கை.. ப. சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்த்த சிபிஐ
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ துணை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
2006ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீடுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதற்கு ப. சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. நிதி நிறுவன முறைகேட்டில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளன என்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்துவருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
இந்த வழக்கில் 2014ம் ஆண்டு சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் பெயர் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விடுபட்ட சில தகவல்கள், ஆதாரங்களை இணைத்து சிபிஐ இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் பெயர்களும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு தலா ரூ.26 லட்சம் மற்றும் ரூ.87 லட்சங்கள் சட்ட விரோதமாக வழங்கப்பட்டது என்று துணை குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்திற்கு ரூ.600 கோடி வரையிலான முதலீடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க அதிகாரம் இருந்ததாகவும், ஆனால், ரூ.3200 கோடிக்கு நடந்த முதலீட்டை வெறும் ரூ.180 கோடி என கணக்கு காட்டியுள்ளார்கள் என்றும், இது தொடக்கம் முதலே சிதம்பரத்திற்கும் தெரியும் என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர முன்னாள் மற்றும் இன்னாள் அரசு ஊழியர்கள் 16 பேர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications