ஆதார் அட்டை இருந்தா இனி சிம் கார்டு “ஆக்டிவேஷன்” உடனுக்குடன் – மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் தொலைத்தொடர்பு வசதிகளின் காரணமாக செல்போன் பயன்படுத்துபவர்கள் சிம் கார்டு வாங்கிய உடன் அதை பயன்படுத்தும் வசதியை தர அரசு திட்டமிட்டுள்ளது.
சிம் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் தகவல்களை அவர்களின் ஆதார் அட்டை தகவல்களுடன் ஒப்பிட்டு உடனடியாக சிம் கார்டை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடைமுறை 5 தொலைத் தொடர்பு வட்டங்களில் சோதனை ரீதியில் செயல்படுத்தப்பட உள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில் நாடு முழுக்க இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது.
தற்போது சிம் கார்டு வாங்குபவர்கள் அது பயன்பாட்டுக்கு வர 2 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அவர்கள் தரும் அடையாள அட்டை மற்றும் முகவரி ஆவணங்களை சரிபார்க்க வேண்டியிருப்பதே இந்த தாமதத்துக்கு காரணமாக உள்ளது.
ஆனால் புதிய முறைப்படி சிம் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை செல்போன் நிறுவனங்கள் இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை உபயோகப் படுத்தி தேசிய அடையாள அட்டை ஆவணத்திடம் பெற்று உடனடியாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.
ஆதார் எண் பெற்றவர்களுடைய தகவல்கள் தேசிய அடையாள அட்டை ஆணையத்தில் மின்னணு வடிவத்தில் சேமிக்கப்பட்டுள்ளதால் இந்த நடைமுறை எளிதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.