"அதானி லஞ்ச விவகாரம்.. நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" சொல்வது பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு
அமராவதி: அதானி மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளது இப்போது பேசுபொருள் ஆகியிருக்கிறது. அதில் அதிகபட்ச லஞ்ச தொகை ஆந்திரப் பிரதேச அதிகாரிக்கே போனதாகக் கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு இந்த விவகாரம் தொடர்பாக சில முக்கிய கருத்துகளை அம்மாநிலச் சட்டசபையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நேற்றைய தினம் ஒரு பரபர குற்றச்சாட்டைச் சுமத்தியது. அதாவது மின்சார ஒப்பந்தங்களைத் தக்கவைக்க அதானி பல மாநில மின்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டியது.
சந்திரபாபு நாயுடு: இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக பாஜக கூட்டணியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். நிலைமையை ஆய்வு செய்து ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மின்சார கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாநில மின்வாரிய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் அப்போது ஆந்திர அரசில் டாப் அதிகாரியாக பணியாற்றிய ஒருவருக்கே அதிகபட்ச லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரா: அதானி குழுமம் சுமார் ரூ. 2000 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதில் ரூ. 1750 கோடி ஆந்திர அதிகாரிக்கு மட்டும் போனதாகக் கூறப்படுகிறது. முதலில் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரப் பிரதேச அரசு மின்சார ஒப்பந்தத்தைக் கையெழுத்திடவில்லை. இதையடுத்து 2021 ஆகஸ்ட் மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்த அதானி பணம் தொடர்பாக உறுதி அளித்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.
இந்தச் சந்திப்பு நடந்த உடனேயே ஆந்திரப் பிரதேச அரசு சுமார் 7 ஜிகாவாட் சூரிய சக்தியை வாங்க ஒப்புக்கொண்டது. நாட்டில் வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்குச் சூரிய மின்சாரத்தை வாங்காத நிலையில், ஜெகன் அரசு இந்த முடிவை எடுத்தது அப்போதே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தான் அமெரிக்க அதிகாரிகள் இதில் லஞ்சம் தரப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

என்ன சொன்னார்: இது தொடர்பாகத் தான் இப்போது ஆந்திர முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார். ஆந்திராவில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், அங்கேயே இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு பேசியிருக்கிறார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகள் என்று குறிப்பிட்ட அவர், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "உண்மைகள் முழுமையாக வெளிவரவில்லை. அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.நாங்கள் நிலைமையை ஆய்வு செய்து, அதன்படி நடவடிக்கை எடுப்போம். மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. எனவே, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.. . அதே தவறு மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அதுவே ஒரே வழி" என்றார்.
அடுத்து என்ன: இந்த குற்றச்சாட்டுகள் தீவிரமானது தான் என்ற அவர், இது மாநிலத்தின் நற்பெயரைப் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர், "இன்று வெளிவந்துள்ள இந்த விவகாரம், ஆந்திரா பிரதேசத்தின் பெயரைச் சேதப்படுத்தியுள்ளது. இது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இப்போது நாங்கள் கேஸ் டாக்குமெண்டுகளை ஆய்வு செய்து வருகிறோம். இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை நிச்சயம் எடுப்போம்" என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications