சத்தீஸ்கரில் வெற்றிகரமாக நடந்த சட்டசபை தேர்தல்.. வேட்டையாடும் மாவோயிஸ்டுகள்-பழங்குடி இளைஞர் படுகொலை!
பஸ்தார்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்தது. இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற மாவோயிஸ்டுகள் விடுத்த அழைப்பை பொதுமக்கள் நிராகரித்ததால் அரசுடன் இணைந்து செயல்பட்டதாக ஒரு பழங்குடி இளைஞரை சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 46 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 46 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நவம்பர் 7-ந் தேதியும் 2-வது கட்டமாக இதர தொகுதிகளில் நவம்பர் 17-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது மாவோயிஸ்டுகள் வேண்டுகோள். இதற்கான போஸ்டர்கள், பேனர்களையும் மாவோயிஸ்டுகள் ஒட்டி இருந்தனர். இதனை மீறி தேர்தல் நடத்தப்பட்டது. சட்டசபை தேர்தலின் போது மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். எல்லை பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டையும் நடந்தது. இதனை மீறி சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் வன்முறைகள் எதுவும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே சட்டசபை தேர்தல் பணிகளில் அரசுடன் இணைந்து செயல்பட்டதாக பழங்குடி இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர் மாவோயிஸ்டுகள். முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற நாராயண்பூர் மாவட்டத்தில் பழங்குடி இளைஞரை சுட்டுப் படுகொலை செய்து சடலம் அருகே துண்டு பிரசுரங்களையும் வீசி இருக்கின்றனர் மாவோயிஸ்டுகள்.
இது தொடர்பாக சத்தீஸ்கர் போலீசார் கூறுகையில், மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவரது நடமாட்டம் பஸ்தார் பிராந்தியத்தில் அதிகரித்திருப்பதாக தகவல் கிடைத்தது. மாவோயிஸ்டுகள் தங்களது நீதிமன்றம் ஒன்றைக் கூட்டி இத்தகைய தண்டனை விதிப்பது வழக்கம். அதனையே தற்போதும் செய்துள்ளனர் என்றனர். மாவோயிஸ்டுகளின் இந்த வெறிச்செயல் பழங்குடி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலையைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications