சத்தீஸ்கர் தேர்தல்: மாவோயிஸ்டுகளுடன் துணை ராணுவத்தினர் பயங்கர துப்பாக்கி சண்டை- 3 வீரர்கள் படுகாயம்!
சுக்மா: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளுக்கு துணை ராணுவப் படையினர் பதிலடி கொடுத்தனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் 3 துணை ராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளனர். மாவோயிஸ்டுகளின் இந்த மிரட்டல்கள், தாக்குதல்களை மீறி சத்தீஸ்கர் மக்கள் பெரும் உற்சாகத்துடன் முதல் கட்ட தேர்தலில் வாக்குப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த 20 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் செல்வாக்கு செலுத்தும் மாவட்டங்களில் உள்ளன.
மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை சட்டசபை தேர்தல்கள் போலியானவை; இந்த தேர்தல்களில் மக்கள் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். ஆனால் மாவோயிஸ்டுகளின் இந்த எச்சரிக்கையை மீறி வாக்கு சாவடிகளை அமைத்தல், வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் ஆத்திரம் அடைந்த மாவோயிஸ்டுகள் தக்குதல்கலை நடத்தினர். வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் பொதுமக்கள், பாஜக நிர்வாகி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். தேர்தல் அதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதலே சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மாவோயிஸ்டுகள் திடீர் திடீர் தாக்குதல்களை நடத்தினர். சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினர் மீதும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு துணை ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இதனால் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை பல மணிநேரம் நடைபெற்றது. இந்த மோதலில் துணை ராணுவப் படையினர் 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் மாவோயிஸ்டுகளை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications