சத்தீஸ்கரில் 200 வாக்குச்சாவடிகளை நிர்வகிக்கும் பெண்கள்! கவனத்தை ஈர்க்கும் வானவில் வாக்குச்சாவடி
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக இன்று 20 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 200 வாக்குச்சாவடிகள் பெண் பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. அதேபோல மாற்று பாலின வாக்காளர்களுக்காக வானவில் வாக்குச்சாவடியும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்த அளவில், மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்குகிறது. இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தம் 40.78 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இன்று நடைபெறும் 20 தொகுதிகளுக்கான தேர்தலில் 223 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அதேபோல மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவுக்காக 5,304 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பஸ்தர் பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதிலும் இந்த 4 மாவட்டங்களில் சில பழங்குடி கிராமங்களில் முதன் முறையாக இந்த முறை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் முதன் முறையாக இன்று வாக்களிக்க இருக்கின்றனர்.
ஆனால் நேற்று நாராயண்பூர் மாவட்டம் ரெங்ககாதி ரெங்ககோண்டி வாக்கு சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு படையினருடன் சென்றுக்கொண்டிருந்த போது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு மூலம் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே வாக்குப்பதிவு அன்று வேறு எந்த அசம்பாவிதமும் நிகழக்கூடாது என்பதற்காக பஸ்தர் பகுதியில் உள்ள 600 வாக்குச்சாவடிகளிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
நாராயண்பூர், தண்டேவாடா, பிஜபூர், கோன்டா, கேன்கர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் 3 மணி வரையும், இதர 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த முறை 200 வாக்குச்சாவடிகள் பெண் பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. அதேபோல மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்க அவர்களுக்கு 'வானவில்' வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 20 தொகுதிகளில் 69 மூன்றாம் பாலின வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்காக இந்த பூத் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஜக்தல்பூரில் அதிகபட்சமாக 29 பேரும், அதைத் தொடர்ந்து அந்தகர் மற்றும் பிஜாப்பூர் இரண்டிலும் 8 பேர், டோங்கர்கர் மற்றும் நாராயண்பூரில் தலா 4 பேர், கேஷ்கலில் 3 பேர், கவர்தா, ராஜ்நந்த்கான், காங்கேர், கோண்டகான் மற்றும் பஸ்தாரில் தலா இருவர், மற்றும் சித்ரகோட், தண்டேவாடா மற்றும் கோண்டாவில் தலா ஒரு மாற்று பாலினத்தை சேர்ந்த வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வானவில் வாக்குச்சாவடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ஆயுதக் காவல்படையை சேர்ந்த 40 ஆயிரம் வீரர்களும், காவல்துறையினர் 20 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய வேட்பாளர்களாக காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் (சித்திரகூட்), அமைச்சர் கவசி லக்மா (கோன்டா), மோகன் மர்கம் (கோன்டாகான்), பாஜகவின் முன்னாள் முதல்வர் ரமண் சிங் (ராஜ்நந்த்கான்) ஆகியோர் இருக்கின்றனர். அரசியல் சூழலை பொறுத்த அளவில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால் முதலமைச்சர் பூபேஷ் பாகல் மீது சமீபத்தில் அமலாக்கத்துறை ரூ.508 கோடி லஞ்ச குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. இதை வைத்து பாஜக தலைவர்கள் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். எனவே பாஜக ஆட்சியை கைப்பற்றுமா? அல்லது காங்கிரஸ் மீண்டு வருமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications