கடைசி 1 மாதம்.. முக்கிய 5 வழக்குகள்.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்க போகும் தீர்ப்புகள்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் முன் முக்கியமான ஐந்து வழக்குகளில் இவர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது.
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் முன் முக்கியமான ஐந்து வழக்குகளில் இவர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது.
தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 2ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து தற்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நிலையில் நீதிபதி தீபக் மிஸ்ராதான் அதிக முறை அரசியல் சாசன தீர்ப்புகளை வழங்கிய தலைமை நீதிபதி என்ற சிறப்பை இதனால் பெற உள்ளார். இந்த 5 வழக்குகளும் மிக முக்கியமான வழக்குகள் ஆகும்.
ஆதார் தீர்ப்பு
இந்த தீர்ப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆதார் வழக்குதான். அதன்படி, மத்திய அரசு சார்பில் கொண்டுவரப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற, ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. அதேபோல் வங்கிக் கணக்கு, செல்போன் சேவைகளைப் பெறவும் ஆதார் எண்ணை கட்டாயம் என்றது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு தற்போது அரசியல் சாசன அமர்வில் இந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
சபரிமலை
இன்னொரு வழக்கு, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது பற்றியது. இந்த வழக்கில் ஏற்கனவே போதுமான விவாதங்களும் கருத்துக்களும் கேட்கப்பட்டுவிட்டது. இதில் இன்னும் 10 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. கேரளா வெள்ளம் காரணமாக தற்போது இது தேசிய செய்தியாகி உள்ளது.
பாலின சமநிலை வழக்கு
அதேபோல் இந்தியத் தண்டனைச் சட்டம் 497-ம் பிரிவு குறித்த வழக்கிலும் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. திருமணத்தை மீறிய பாலியல் உறவை தண்டனைக்குரிய குற்றம் என்று இந்த சட்டம் கூறுகிறது. அதேசமயம், ஒரு பெண் ஒரு ஆணுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று 497-ம் பிரிவு கூறுகிறது. இதில் உள்ள 2 அம்சங்களை அரசியல் சாசன அமர்வு விசாரித்து முடித்துள்ளது. இதில் இந்த மாதம் தீர்ப்பு வரும்.
அயோத்தி வழக்கு
இன்னொரு முக்கியமான வழக்குதான் அயோத்தி பாபர் மசூதி துணை வழக்கு. 1994ல் உச்ச நீதிமன்றம், மசூதிகளை இஸ்லாம் மதத்தின் மிக முக்கியமான இடமாக பார்க்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக அரசியல் சாசன அமர்வில் சீராய்வு மனு அளிக்கப்பட்டது. இதில் தற்போது தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இதை பொறுத்தே அயோத்தி விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் ஏற்படும்.
இன்றைய தீர்ப்பு
அது இல்லாமல் இன்று பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையருக்கும் சட்ட பிரிவு ஆகும். இதற்கு எதிராக வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.