கணவன்-மனைவி போல நடித்து, அமெரிக்காவுக்கு குழந்தைகளை கடத்திய கும்பல் பெங்களூரில் கைது!
பெங்களூர்: சிறுவர் சிறுமிகளை கடத்தி அமெரிக்காவில் விற்பனை செய்து வந்த, பெண்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட கும்பலை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் தலைமையிலான போலீஸ் படை இந்த பெரும் மோசடியை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ஹரிசேகரன் கூறியதாவது: உ.பி., பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை பெங்களூருக்கு கடத்திவந்து, போலியாக பாஸ்போர்ட், விசா பெற்று, அவர்களை அமெரிக்காவில் விற்பனை செய்து வந்த, 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட கும்பலை சிறப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
#PressMeet by @AddlCPEast @ Office of the Commissioner of Police. pic.twitter.com/hkmF5frtxO
— P.HARISHEKARAN IPS (@AddlCPEast) February 8, 2016
பெங்களூரிலுள்ள ஏழை தம்பதிகள் அல்லது வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த ஆண்-பெண்களை கணவன் மனைவியாக நடிக்க வைத்து, கடத்தி வரப்படும் குழந்தைகளுக்கு அவர்கள்தான் பெற்றோர் என்பது போல ஆவணங்களை தயாரித்து ஜோடிப்பது இக்கும்பல் வழக்கம்.
கடத்தி வரப்படும் குழந்தைகளுக்கு இந்த தம்பதிகள்தான், பெற்றோர் என்று ஜோடிப்பதற்காக, வீட்டு அக்ரிமென்ட், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல ஆவணங்களை வாங்கிக்கொடுப்பதற்கு ஒரு கும்பல் செயல்பட்டுள்ளது. பின்னர், இந்த ஆவணங்களை கொண்டு, சென்னையிலுள்ள அமெரிக்க தூரகம் மூலமாக அமெரிக்காவுக்கு சுற்றுலா விசா எடுத்துக்கொடுப்பதற்காக ஒரு கும்பல் செயல்பட்டுள்ளது.
கடத்தல், ஆவண தயாரிப்பு, விசா பெறுதல் போன்ற வேலைகளுக்கு வெவ்வேறு கும்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விசா கிடைத்ததும், அமெரிக்கா செல்லும் அந்த 'குடும்பம்' அதிகபட்சம் ஒரு வாரம் அங்கு தங்கியிருக்கும். பின்னர், குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு, ஆணும், பெண்ணும் மட்டும் இந்தியா திரும்பிவிடுவது வழக்கம்.
ஒரு தம்பதிகளோடு அதிகபட்சம் 3 குழந்தைகளை அனுப்புவது இந்த கும்பலின் வாடிக்கையாக இருந்தது. அமெரிக்காவில் விடப்படும் குழந்தைகள் என்ன செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். இவ்வாறு ஹரிசேகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications