ஆந்திராவில் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம்
அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மின் வெட்டு ஏற்பட்டதன் காரணமாக செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் 50% மின் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் அண்மை காலமாக அறிவிக்கப்படாமல் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அம்மாநில மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
நேற்று விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிபட்டினத்தில் அமைந்துள்ள என்.டி.ஆர். அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணை பிரசவ வலியுடன் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் மின்வெட்டு
பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை பிரசவ அறைக்கு கொண்டு சென்ற நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரும் பழுதடைந்ததால் மருத்துவர்களும் செவிலியர்களும் செய்வதறியாது தவித்தனர். நேரம் கடந்துகொண்டிருப்பதால் அவசரத்துக்கு வேறு வழியின்றி பெண்ணின் குடும்பத்தினரிடம் செல்போன் டார்ச் லைட்டுகள், மெழுகுவர்த்திகளை மருத்துவமனை ஊழியர்கள் ஏற்பாடு செய்ய சொல்லி இருக்கின்றனர்.

செல்போன் வெளிச்சத்தில் பிரசவம்
பதறிப்போன பெண்ணின் கணவரும், தாயாரும் விளக்குகளை ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதனை அடுத்து பெண்ணுக்கு செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் நடைபெற்று சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து பெண்ணின் கணவர் தெரிவிக்கையில், "நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனை ஊழியர் எங்களிடம் மெழுகுவர்த்தி வாங்கி வர சொன்னார். ஆனால், அந்த நேரத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் செல்போன்களையும் டார்ச் லைட்டுகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தோம்.

இதுவரை நடக்காத சம்பவம்
மின்வெட்டு ஏற்பட்டவுடன் என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை. பயந்துபோய்விட்டோம். நாங்கள் கடவுளை வேண்டினோம். எந்த பிரச்சனையும் இல்லாமல் குழந்தை பிறந்துவிட்டது. இது மிகவும் சிக்கலான தருணம். செல்போன் வெளிச்சத்தில் குழந்தை பிரசவம் நடைபெற்றதை இதுவரை நாங்கள் கேள்விப்பட்டது இல்லை." என்றார்.

நோயாளிகள் அவதி
மருத்துவமனையில் இந்த மின் தடை காரணமாக கொசுத்தொல்லை ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டதாக பெண்ணும் மற்ற நோயாளிகளும் குற்றம்சாட்டி இருக்கின்றனர். மருத்துவமனையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொடர்ந்து சில நாட்களாக ஜெனரேட்டர் இடைவெளியின்றி இயங்கிக்கொண்டு இருந்ததாகவும் அதன் காரணமாகவே பழுதடைந்ததாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு
இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ், "இது இந்த மாநிலத்தின் மோசமான நிலையை காட்டுகிறது. தாய்மார்களும், பிறந்த குழந்தைகளும் மின் தடை காரணமாக மருத்துவமனையில் நரக வேதனையை அனுபவிக்கின்றன. ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசே இதற்கு காரணம்." என்றார்.












Click it and Unblock the Notifications