அருகருகே வந்த 2 நாட்டு படை.. எல்லையில் 10000 வீரர்களை குவித்த சீனா.. ஷூட்டிங்கை தொடர்ந்து பதற்றம்!
லடாக்: லடாக்கில் முக்கிய பகுதிகளில் சீனாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. பாங்காங் திசோவின் தெற்கு பகுதியில் சீனாவின் படை வீரர்கள் 10000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.
லடாக்கில் தற்போது போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா குற்றச்சாட்டு வைத்துள்ளது. எல்லையில் அத்துமீறி நுழைந்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக சீனா கூறியுள்ளது.
இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. லடாக்கில் பாங்காங் திசோ அருகே இருக்கும் ஷென்போ மலைப்பகுதியை இந்தியா அத்துமீறி கடந்து துப்பாக்கி சூடு நடத்தியது என்று சீன ராணுவம் கூறியுள்ளது.
இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியது.."பதிலடி" கொடுத்தோம்.. சீனா வைக்கும் புகார்.. நேற்று என்ன நடந்தது?
சீன படைகள்
இந்த நிலையில் லடாக்கில் முக்கிய பகுதிகளில் சீனாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. லடாக்கில் எல்லையில் ஏற்கனவே சீனாவின் வீரர்கள் 10 ஆயிரம் பேர் வரை இருந்தனர். இந்த நிலையில் தற்போது பாங்காங் திசோவின் தெற்கு பகுதியில் சீனாவின் படை வீரர்கள் 10000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். நவீன ஆயுதங்கள், கருவிகள், வாகனங்களை சீனா எல்லையில் இறக்கி உள்ளது.
படைகள் குவிப்பு
ஸ்பான்கூர் இடைவெளி, ரெசின் லா பகுதிகளில் சீனாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர். சீனா எல்லையில் இப்படி படைகளை குவித்து இருப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சாட்டிலைட் புகைப்படங்கள் இணையத்தில் இது தொடர்பாக வெளியாகி உள்ளது. எல்லையில் சீனாவின் கட்டுப்பாட்டு பகுதிகள் அனைத்திலும், பிஎல்ஏ ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நவீன பீரங்கிகளை சீனா இங்கே களமிறக்கி உள்ளது.
அமைதி பேச்சுவார்த்தை
முக்கியமாக எல்லையில் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் சுசூல் செக்டர் பகுதியை சீனா குறி வைத்துள்ளது. இந்த இடத்தை கைப்பற்றினால் லடாக்கில் பாங்காங் திசோவின் பெரும்பாலான இடங்களை கைப்பற்ற முடியும். இதனால் அங்கு சீனா ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. இதற்கு அருகில்தான் இந்தியா எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறியுள்ளது. சரியாக இந்த சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு எல்லையில் சீனா படைகளை குவித்து உள்ளது.
சில மீட்டர்கள் தூரம்
இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே தற்போது வெகு சில மீட்டர்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. துப்பாக்கி மூலம் சண்டை போட்டுக்கொள்ளும் தூரத்திலேயே இரண்டு நாட்டு படைகள் உள்ளது. ஆனால் லடாக்கில் பெரும்பாலான மலைகளை இந்தியா ஆக்கிரமித்து உள்ளது. இதனால் சீனா தரை பகுதியில் அதிக அளவில் படைகளை குவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.