"நீங்க எப்படி வரலாம்".. கோயிலில் இருந்து.. வெளியே விரட்டப்பட்ட தலித் பெண்கள்.. மபியில் பயங்கர கலவரம்
கோயிலில் வழிபட்டுக் கொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்களிடம் மாற்று சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சிலர், "நீங்கள், எப்படி எங்கள் கோயிலுக்கு வரலாம்" எனக் கேட்டுள்ளனர்.
போபால்: மத்திய பிரதேசத்தில் கோயிலுக்கு சென்று வழிபட்ட தலித் பெண்களை மாற்று ஜாதியினர் அடித்து விரட்டியதால் அங்கு பெரும் ஜாதி கலவரம் மூண்டுள்ளது.
மூன்று ஜாதியினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் பலர் படுகாயமடைந்த நிலையில், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலித் பெண்களை கோயிலில் இருந்து விரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தலித் சமூகத்தை குறிவைத்து..
சமீபகாலமாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித் மக்கள் மீது தாக்குதலும், தீண்டாமை கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. கர்நாடகாவில் ஒரு கோயிலில் சாமி சிலையை தொட்ட தலித் சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல, உத்தரபிரதேசத்தில் பொதுவாக இருந்த தண்ணீர் பானையில் குடிநீர் எடுத்து சிறுவனை ஆசிரியர் அடித்து கொலை செய்தது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது நம் நாடு எங்கு போய் கொண்டிருக்கிறது என்ற கேள்வியைதான் எழுப்பத் தோன்றுகிறது.

கோயிலுக்கு சென்ற தலித் பெண்கள்
அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் தற்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள சாப்ரா கிராமத்தில் பிரசித்திபெற்ற சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு 'பலாய்' என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் நேற்று சென்று வழிபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மாற்று சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சிலர், "தலித் சமூகத்தை சேர்ந்த நீங்கள், எப்படி எங்கள் கோயிலுக்கு வரலாம்" எனக் கேட்டுள்ளனர்.

கொந்தளிப்பு
அதற்கு அப்பெண்கள், கோயில் என்பது பொதுசொத்து. இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம் எனக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாற்று சமூகத்தினர் அப்பெண்களை கோயிலில் இருந்து அடித்து விரட்டினர். இந்நிலையில், அந்தப் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து தங்கள் பகுதி மக்களுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, தலித் சமூகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அந்தக் கோயிலுக்கு செல்ல முயன்றனர்.

கலவரம்
அப்போது அங்கிருந்த ஏராளமான மாற்று சமூகத்தினர், அவர்களை கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் அவர்கள் தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த கடைகள், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக அங்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications