மோடிக்காக காத்திருக்கும் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான ஒப்புதல்!!
டெல்லி: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற உடன் ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான தேங்கிக் கிடக்கும் 430 திட்டங்களுக்கு ஒப்புதல் தர வேண்டிய முதன்மைப் பணி காத்திருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இறுதிக் காலத்தில் பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தேக்க நிலையை உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த திட்டங்களுக்கான கண்காணிப்புக் குழுத் தலைவரான அனில் ஸ்வரூப், ஐக்கிய முன்னணி அரசின் இறுதிக் காலத்தில் நிலக்கரி விநியோகம் மற்றும் மின் திட்டங்கள் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.
கடந்த 9 மாத காலத்தில் 150 திட்டங்களுக்கு அதாவது ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மட்டுமே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது 430 திட்டங்கள் அதாவது ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி அரசு முன்னுரிமை கொடுத்து ஒப்புதல் கொடுத்தால் நாட்டின் பொருளாதார நிலைமையில் நல்ல தாக்கம் ஏற்படும் என்றார்.
ஏற்கெனவே முக்கிய நிதித்துறை சார்ந்த அமைச்சகங்களின் செயலர்களுடன் நரேந்திர மோடி தமது ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications