சசிகலாவுக்கு சிறைக்குள் சலுகைகளா? சட்டப்படி குற்றமாச்சே என்கிறார் ஆச்சார்யா
சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குவது சட்டப்படி குற்றமாகும் என்று கர்நாடக அரசு தரப்பில் வாதாடிய வக்கீல் பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது சட்டப்படி குற்றமாகும் என்று மூத்த வக்கீல் ஆச்சார்யா தெரிவித்தார்.
தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் அக்குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் ஏ.சி. அறை, வீட்டு சாப்பாடு, மேல்நாட்டு கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் வேண்டும் என்று சசிகலா பெங்களூர் சிறைத் துறையிடம் மனு தாக்கல் செய்தார். எனினும் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசியல் பின்னணி கொண்டவர் என்ற முறையில் சசிகலாவுக்கு சிறையில் டிவி ஃபேன், நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செவ்வாய்க்கிழமை முதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் கூறியதாவது: குற்றவாளிகள் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகிய 3 பிரிவுகளில் உள்ளதாலும், வருமான வரி செலுத்தும் பட்டியலில் உள்ளதாலும் தங்களுக்கு சில வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கடந்த 15-ந்தேதி நீதிபதியிடம் சசிகலாவும், இளவரசியும் மனு கொடுத்தனர்.
அதை பரிசீலனை செய்யும்படி சிறை நிர்வாகத்திற்கு நீதிபதி பரிந்துரை செய்ததால் அதை ஏற்று சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு டி.வி. வழங்கப்பட்டு உள்ளது. மின்விசிறி, நாற்காலி வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. சுதாகரனுக்கு எந்தவசதியும் செய்யப்படவில்லை. அவர் சாதாரண அறையில் உள்ளார் என்றார்.
சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதற்கு சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் வாதாடிய வக்கீல் ஆச்சார்யா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு இது போன்ற சலுகைகள் வழங்குவது சட்டப்படிக் குற்றமாகும். தவறு செய்தவர்கள் சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தினால் அதற்கு பெயர் தண்டனை ஆகாது. பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றம் செய்யக்கோரி சசிகலா முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா நினைத்தால் தமிழக சிறைக்கு மாற்றலாகி விடமுடியாது.
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்க வேண்டும். சிறை மாற்றம் கோரி குற்றவாளிகள் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தால் அதை கர்நாடக அரசின் சார்பில் கண்டிப்பாக ஆட்சேபணை தெரிவித்து எதிர்ப்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.