மசூதி குறித்த ‘சாமி’யின் சர்ச்சைப் பேச்சு... ராஜ்யசபாவில் காங்கிரஸ் ரகளை!
டெல்லி: மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற சுப்பிரமணிய சுவாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி சமீபத்தில் அசாம் மாநில பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், ‘மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை இடிக்கவேண்டும்' எனப் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இப்பிரச்சினை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது.
மாநிலங்களவை தொடங்கியதும், புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பிரமோத் தெவாரி, இப்பிரச்சனையை எழுப்பினார். ‘மதசார்பின்மை இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். எனவே, சுப்பிரமணியன் சாமியின் சமீபத்திய கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக குற்றம் பதிவு செய்ய முடியும்' என அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து துணை சபாநாயகர் குரியன், ‘இப்பிரச்சனையை பூஜ்ஜிய நேரத்தில் எழுப்ப நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது, இது அனுமதிக்கப்படும். அப்போது நீங்கள் இதுதொடர்பாக பேசலாம்' என்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியிலீடுபட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்த அவர்கள், பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையில், ‘இப்பிரச்சனையை பூஜ்ஜிய நேரத்தில் தான் எழுப்ப முடியும்' எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களை இருக்கைக்கு செல்லுமாறு துணை சபாநாயகர் குரியன் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து குரியன், இது ஒழுக்கமற்றது, இதுபோன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறி அவையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications