மனுத்தாக்கல் நேரடி ஒளிபரப்பு: மோடி மீது வழக்குப் பதிவு செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி: மோடியின் வேட்புமனுத் தாக்கலை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பியது தேர்தல் விதிமீறல், எனவே அது தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி, நேற்று வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தனது தொண்டர்களுடன் வாகனத்தில் ஊர்வலமாக வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த மோடியை சில தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.

இச்செயல் அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், லோக்சபா தேர்தலில் 6 வது கட்டமான நேற்று தேர்தல் நடைபெற்ற 117 தொகுதிகளிலும் மோடியின் வேட்புமனுத் தாக்கல் காட்சிகள் டிவியில் ஒளிபரப்பானது. எனவே, இது தேர்தல் நடத்தை விதி மீறல் என அவர் குற்றம் சாட்டினார்.
எனவே, மோடி மற்றும் இதில் தொடர்புடைய பா.ஜனதா தலைவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். நன்கு திட்டமிட்டு, ஓட்டுப்பதிவு நாளில் மனுதாக்கலுக்கு பா.ஜனதா ஏற்பாடு செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications