உண்ணாவிரதம்னாலே இப்படித்தானா?.. போராட்டத்திற்கு போகும் முன் வயிறு முட்ட சாப்பிட்ட காங்கிரஸ்காரர்கள்!
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர்கள் வயிறு நிறைய சாப்பிடும் காட்சிகள் அடங்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர்களின் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
நாடு முழுவதும் மதநல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை வளர்த்துக்கொள்வதை மேம்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. டெல்லி ராஜ்கோட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர்கள் பூரி, பரோட்டாவை வெளுத்துவாங்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. டெல்லி பா.ஜ.க தலைவர் ஹரிஷ் குராணா, இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளார்.
காலை உணவு உண்ட தலைவர்கள்
உணவு விடுதி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு செல்வதற்கு முன்னதாக ஒன்றாக இருந்து சாப்பிடும் புகைப்படம் என குராணா குறிப்பிட்டுள்ளார். சிறிய உணவு விடுதியில் காங்கிரஸ் தலைவர்கள் அரவிந்தர் லவ்லி, அஜய் மாக்கன் மற்றும் பிறர் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடும் காட்சி பூரி, பரோட்டாவை ருசித்து சாப்பிடுகின்றனர்.
பாஜக விமர்சனம்
காங்கிரஸ் கட்சி ஒரு பக்கம் உண்ணாவிரதம் அறிவிக்கிறது மற்றொரு பக்கம் அந்தக் கட்சியின் தலைவர்கள் உணவு விடுதியில் உண்டு மகிழ்கின்றனர். இது அவர்கள் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று ஹரிஷ் குறிப்பிட்டுள்ளார். வேண்டுமென்றால் இந்தப் புகைப்படம் உண்மையல்ல என்று காங்கிரஸ் கட்சியினர் நிரூபிக்கட்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
|
புது விளக்கம்
குராணாவின் இந்த விமர்சனத்தை காங்கிரஸ் தலைவர் லவ்லி நிராகரித்துள்ளார். இன்று நடப்பது காலவரையற்ற உண்ணாவிரதம் இல்லை. நாங்கள் காலை 8 மணியளவில் விடுதியில் உணவு சாப்பிட்டோம். உண்ணாவிரத போராட்டம் காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை தான் நடக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். பாஜக நாட்டை முறையாக ஆட்சி செய்யாமல் நாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறது என்றும் லவ்லி கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் புது மாதிரி உண்ணாவிரதம்
அரசியல் கட்சிகள் அறிவிக்கும் உண்ணாவிரதங்கள் எந்த அளவில் இருக்கின்றன என்பதை இந்த சம்பவங்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டுகின்றன. அண்மையில் சென்னையில் அதிமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது மதிய உணவு வேளையில் அதிமுகவினர் சைலன்ட்டாக சென்று உணவு சாப்பிட்டு வந்த புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதத்திற்கு முன்னர் விடுதியில் சாப்பிட்டுவிட்டு அதற்கு புது விளக்கத்தையும் கொடுத்துள்ளனர். ஒரு வேளை உண்ணாவிரதப் போராட்டங்களும் காலத்திற்கேற்ப மாறி வருகிறதோ?