107 எம்எல்ஏக்கள் ஆதரவு?.. ஆளுநரை சந்திக்கும் திட்டத்தில் அசோக் கெலாட்.. மீட்டிங்கில் நடந்தது என்ன?
ஜெய்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. அங்கு கடுமையான அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த மீட்டிங்கிற்கு பின் முதல்வர் அசோக் கெலாட் 107 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளார். முதல்வர் அசோக் கெஹ்லட் ஆட்சிக்கு எதிராக அவர் அதிருப்தியை வெளியிட்டு இருக்கிறார். இதனால் அங்கு ஆட்சி மொத்தமாக கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சச்சின் பைலட்டிற்கு ஆதரவாக ராஜஸ்தானில் 30 எம்எல்ஏக்கள் இருப்பதாக அவர் நேற்று கூறினார். இவர்கள் எல்லோரும் சச்சின் பைலட் உடன் டெல்லியில் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அவரின் அணியில் இத்தனை எம்எல்ஏக்கள் இல்லை என்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மீட்டிங் தொடர்பாக ராஜஸ்தானில் அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மீட்டிங்கில் கலந்து கொள்ளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். யாரும் ஸ்பெஷல் கிடையாது. யாருக்கும் சிறப்பு அனுமதி கிடையாது, எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் காங். பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து நேற்று இரவு நடக்க வேண்டிய மீட்டிங் இன்று காலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நடக்கும் மீட்டிங்கில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெஹ்லட்டிற்கு உண்மையில் எத்தனை பேர் ஆதரவு கொடுக்கிறார்கள். அவருக்கு உண்மையில் எவ்வளவு பலம் இருக்கிறது என்று தெரிந்து விடும் என்று கூறுகிறார்கள்.
இன்று மீட்டிங்கில் 107 எம்எல்ஏக்கள் முதல்வர் அசோக்கிற்கு ஆதரவாக கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முழுமையாக விவரம் இன்னும் வெளியாகவில்லை. இந்த மீட்டிங்கில் 97 பேர் கலந்து கொண்டதாகவும். 102 எம்எல்ஏக்கள் எழுத்து பூர்வமாக முதல்வர் அசோக் கெலாட்டிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள்.
இதனால் இந்த மீட்டிங்கிற்கு பின் முதல்வர் அசோக் கெலாட் 107 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ராஜஸ்தான் ஆளுநர் கால்ராஜ் மிஸ்ராவை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இன்னொரு பக்கம் சச்சின் பைலட்டிற்கு 16 க்கும் குறைவான எம்எல்ஏக்களே ஆதரவு தருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு 124 இடங்கள் உடன் கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது. காங்கிரஸ் கட்சியில் 119 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிபிஐ கட்சிக்கு 2, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 1, பாரதிய டிரைபல் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications