எனக்கா நிற்க சீட் இல்லை.. ஆபீஸில் வாங்கி போட்ட 300 சேர்களை தூக்கி கொண்டு போன காங்கிரஸ் எம்எல்ஏ!
சீட் தராத ஆத்திரத்தில் 300 சேர்களை எம்எல்ஏ தூக்கி சென்றுவிட்டார்.
ஒளரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் தனக்கு கட்சி மேலிடம் சீட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் ஆபீஸுக்காக தான் வாங்கிக் கொடுத்திருந்த 300 சேர்களை தூக்கிக் கொண்டு போன செயல் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது பெயர் அப்துல் சத்தார் நபி என்பதாகும். இவர் தற்போது சில்லோட் என்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார்.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் ஒளரங்காபாத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் கட்சியில் சீட் கிடைக்கவில்லை.

சேர்கள்
கடுப்பான அப்துல் சத்தார் தனது ஆதரவாளர்களோடு கட்சி அலுவலகத்திற்குப் போனார். அங்கு போட்டிருந்த 300 பிளாஸ்டிக் சேர்களையும் டெம்போவில் தூக்கிப் போட்டு போய்க் கொண்டே இருந்தார். பின்னர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பும் வெளியிட்டார்.

ஆத்திரம்
இந்த சேர்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தவர் சத்தார்தானாம். பல வருடமாக கட்சிக்காக நிறைய செலவு செய்துள்ளாராம். இந்த நிலையில் தனக்கு சீட் இல்லாமல் போனதால் ஆத்திரமடைந்த அவர் உங்களுக்கு உட்காரக் கூட சீட் இருக்கக் கூடாது என்று கூறி இந்த சேர்களை எடுத்துச் சென்று விட்டாராம்.

ஆதரவாளர்கள்
எடுத்துக் கொண்டு போன சேர்களையெல்லாம் தனது அலுவலகத்திற்குக் கொண்டு போய் விட்டாராம் சத்தார். அவரே கட்சியை விட்டு விலகி விட்டார். பிறகு எதற்கு அவர் வாங்கி வைத்த சேர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

சீட் இல்லை
தற்போது காங்கிரஸ் தலைவர்கள் சத்தாருடன் பேசி சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்களாம். ஆனால் சீட் கொடுத்தால் மட்டுமே அவர் இறங்கி வருவார் என்பதால் நாளை முழு நிலவரம் தெரியும் என்று சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications