வாக்கு சாவடி அருகே மோடி பிரச்சாரம் செய்வதா... தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க காங்., திட்டம்
அகமதபாத்: வாக்கு சாவடிக்கு அருகே,செய்தியாளர்களை சந்தித்தது தேர்தல் நடத்தை விதிக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்தில் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, அகமதபாத் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். அப்போது, வெளியில் காத்திருந்த பாஜகவினர், மோடி, மோடி என உற்சாக முழக்கமிட்டனர். வாக்குச் சாவடியை விட்டு வெளியில் வந்த பிரதமர் மோடி, வாக்களித்ததன் அடையாளமாக மை வைத்த விரலை உயர்த்திக்காட்டினார்.

பின்னர், மை விரலை உயர்த்திக் காட்டியபடி நடந்தும், வாகனத்திலும் சென்றார். அப்போது, இருபுறமும் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர், ஆரவார முழக்கம் எழுப்பி பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெடிகுண்டுவை விட சக்தி வாய்ந்தது நமது வாக்குகள் என தெரிவித்தார். தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்த மோடி, கும்பமேளாவில் புனித நீராடிய பின்னர் கிடைக்கும் புனித தன்மையை, ஜனநாயக திருவிழாவான தேர்தலில் வாக்களித்த பின்னர் ஒருவரால் அனுபவிக்க முடியும் என தெரிவித்தார்.
தீவிரவாதத்துக்கு ஆயுதம் வெடிகுண்டு என்றும், ஜனநாயகத்துக்கு பலம் வாக்குகள் என்றும் மோடி தெரிவித்தார். வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது நமது வாக்குகள் என தாம் உறுதியாக நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நமது வாக்குகளின் பலத்தை புரிந்து கொள்ள முன்வர வேண்டும் என வாக்காளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
தேர்தல் நடத்தை விதிகளையும் மீறி, பிரச்சாரத்தில் ஈடுபடுவது போல் மோடி பேசியிருப்பதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர், இன்று மாலை தேர்தலை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications