டெல்லியில் திருப்பம்- ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங். ஆதரவு- ஆளுநருக்கு கடிதம்!!

டெல்லி சட்டசபை தேர்தலில எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி 32 தொகுதிகளிலும், அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள பாரதிய ஜனதாவுடன் கவர்னர் நஜீவ் ஜங் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், போதிய பெரும்பான்மை பலம் இல்லாததால், ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று பாரதிய ஜனதா மறுத்துவிட்டது.
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கெஜ்ரிவால் இன்று ஆளுநரை சந்தித்து பேசுகிறார்.
இதனிடையே வெற்றி பெற்ற 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். அப்போது, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்குமாறு யோசனை தெரிவித்தனர். இந்த யோசனை பரிசீலனையில் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் நஜீப் ஜங்குக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஜே.பி.அகர்வால் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. ஆம் ஆத்மியின் 28 எம்.எல்.ஏ.க்களையும், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்தால், 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்து விடுகிறது. எனவே, காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி அரசு அமைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஆம் ஆத்மி ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications