"நாங்கள் தயார்".. ஆர்.எஸ்.எஸ். கோட்டை நாக்பூரில் நாளை லோக்சபா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறது காங்.
நாக்பூர்: லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நாளை தொடங்குகிறது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கோட்டையான நாக்பூரில் 'நாங்கள் தயார்' என்ற தலைப்பில் காங்கிரஸ் லோக்சபா தேர்தல் பிரசாரம் தொடங்குகிறது.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு அனைத்து மாநிலங்களிலும் களப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்துக்கு நேற்று சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா அம்மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 35 ஐ கைப்பற்ற வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு. இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியும் 'இந்தியா' கூட்டணி என்ற 28 கட்சிகளுடன் கை கோர்த்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்கிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தனித்துவிடப்பட்டிருந்தது காங்கிரஸ். இம்முறை பெரும்பாலான மாநில கட்சிகள் அரவணைப்புடன் காங்கிரஸ் களம் காண்கிறது. இந்த தேர்தலிலாவது கவுரவமான இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்பது காங்கிரஸின் போராட்டம்.
காங்கிரஸ் கட்சி தமது லோக்சபா தேர்தல் பிரசாரத்தை நாளை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தொடங்குகிறது. "நாங்கள் தயார்" என்ற தலைப்பில் இந்த லோக்சபா தேர்தல் பிரசாரம் தொடங்கப்படுகிறது. மகாத்மா காந்தி 1920-ம் ஆண்டு இதே நாக்பூரில்தான் ஒத்துழையாமை இயக்கத்தை பிரகடனம் செய்தார். அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சி தமது தேர்தல் பிரசாரத்தை நாக்பூரில் தொடங்குகிறது. இன்னொன்று மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் நாக்பூரில்தான் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கோட்டையான நாக்பூரில் இருந்தே காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கிறது.
நாக்பூரில் நாளை தொடங்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications