சமூகநீதி.. காங்கிரஸ் கட்சியில் 50% இடஒதுக்கீடு..பதவிகளில் பெண்கள், இளைஞர்களுக்கு அடித்த ‛ஜாக்பாட்’!
காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள், பெண்களுக்கு அதிகளவில் பதவிகள் கிடைக்கும் வகையில் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை கொண்டு வர கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ராய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியில் அனைத்து பொறுப்பு, பதவிகளிலும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறை அமல் செய்ய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினருக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனை பலரும் வரவேற்றுள்ளனர்.
மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தோடு சிறப்பு மாநாடு சத்தீஸ்காரில் துவங்கியது.
3 நாட்களுக்கான இந்த மாநாடு சத்தீஸ்கார் மாநிலம் ராய்பூரில் நடந்து வருகிறது. இது காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடாகும்.

கட்சி விதிகளில் திருத்தம்
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது, இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களில் செயல்படுவது எப்படி? என்பது பற்றி தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

என்னென்ன தீர்மானங்கள்
இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி 2025 ஜனவரி 1ம் தேதி முதல் கட்சியில் டிஜிட்டல் மெம்பர்ஷிப் முறை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 முதல் டிஜிட்டல் மெம்பர்ஷிப் மட்டுமே காங்கிரஸுக்கு இருக்கும் என்று அது கூறியது. மேலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் குற்றங்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வரவும், மக்களின் இலவச சுகாதார உரிமையை உறுதிப்படுத்தவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மீட்டெடுக்கவும் உறுதியேற்கப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டணி
மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள 8 மாநில சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவை இந்தியாவின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானவை. மத்திய பாஜக அரசை கருத்தியல் அடிப்படையில் எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவசரமாக ஒன்றிணைய வேண்டும் என தீர்மானங்கள் தெரிவிக்கின்றன.அதோடு வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை கட்சி மீட்டெடுக்கும் எனவும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது.

85 திருத்தங்கள்
இந்த கூட்டத்தில் கட்சி விதிகளில் மொத்தம் 85 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியில் புதிதாக இடஒதுக்கீடு முறை அமல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, அனைத்து கட்சி பதவிகளிலும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர் ஆகியோர்களுக்கு கட்சியின் செயற்குழு, அனைத்து கட்சி பதவிகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு வாய்ப்பு
இந்த முடிவு என்பது சமூக நீதியின் புதிய அத்தியாயமாக இருக்கும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு 50 சதவீதம் இடங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த சிந்தனையாளர்கள் மாநாட்டில் இந்த வகையான 50 சதவீத இடஒதுக்கீடு முறை கொண்டு வர முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அது நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

செயற்குழு அம்சம்
இதன்மூலம் கட்சி பொறுப்பு பதவிகளில் பெண்கள், இளைஞர்களின் எண்ணிக்கை என்பது அதிகரிக்கும். இதுதவிர திருத்தப்பட்ட விதிகளின் படி காங்கிரஸ் செயற்குழுவில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டின் காங்கிரஸ் தலைவர்கள் தவிர கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர்கள் மற்றும் முன்னாள் தேசிய தலைவர்கள் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications