டிசம்பர் 16ல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல்... ஒருமனதாக தேர்வாகிறார் ராகுல்காந்தி!
ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்கான காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் இன்று காலை கூடுகிறது.
Recommended Video
டெல்லி : ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சுமார் 19 ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் உள்ளார். சோனியாகாந்தியின் உடல்நிலை காரணமாகவும், கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சும் விதமாகவும் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு ராகுல்காந்தி தயாராகும் விதமாக கடந்த 2013ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவர் துணைத் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் ராகுல்காந்தியை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க சோனியா காந்தி இசைவு தெரிவித்தார்.
கட்சி அமைப்புத் தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன அவை டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிவடைய உள்ளன. இந்நிலையில் கட்சி தேர்தலை ஒட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தலைவர் தேர்தல் எப்போது?
இந்நிலையில் கட்சித் தலைவர் தேர்தலுக்கான ஒப்புதலை வழங்குவதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது. நம்பர் 10, ஜன்பத்நகர், டெல்லி முகவரியில் உள்ள சோனியாகாந்தியின் வீட்டில் அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பங்கேற்றனர்.
டிசம்பர் 19ல் தேர்தல் முடிவு
அப்போது டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1 முதல் இதற்கான வேட்பு மனக்கள் பெறப்படும் என்றும், டிசம்பர் 19ல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போட்டியின்றி தேர்வு
இதனிடையே ராகுல்காந்தியை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கும் முடிவிற்கு காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் போட்டியின்றி ராகுல்காந்தி ஒருமனதாக டிசம்பர் மாத இறுதியில் தலைவராக பதவியேற்பார் என்று தெரிகிறது.