பிரியங்கா ஆல்கஹால் குடித்தாரா?: சுப்ரமணியசாமி வீட்டை முற்றுகையிட்ட காங்கிரசார்
அமேதி: பிரியங்கா ஆல்கஹால் குடித்திருப்பார் என சுப்பிரமணிய சாமி கூறியதை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரியாங்கா, தனது சகோதரரும், பா.ஜ.க. வேட்பாளருமான வருண் காந்தியை ''காந்தி குடும்ப நெறிமுறையில் இருந்து வருண் விலகி விட்டார். அவர் தவறான பாதையை தேர்வு செய்து விட்டார்'' எனக் கூறினார்.
அதற்கு வருண் காந்தி ''நான் சரியான பாதையில்தான் செல்கிறேன்'' என பதிலளித்தார்.

குடும்ப தேநீர் விருந்து
இதையடுத்து, ''இது ( நாடாளுமன்ற தேர்தல்) குடும்ப தேநீர் விருந்து அல்ல; இது கொள்கைக்கான யுத்தம்...எங்கள் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்'' என வருண் காந்தியை தாக்கி பிரியங்கா கருத்து தெரிவித்தார்.
அறிக்கைப் போர்
இதற்கு பதிலளித்த வருண் காந்தி ''நான் அமைதியோடு இருப்பதை என்னுடைய பலவீனமாக நினைக்கக் கூடாது. பிரியங்கா தனி நபர் தாக்குதலை கைவிட்டு, வேலைவாய்ப்பு, ஊழல், ஏழ்மை பற்றி விவாதிக்க வேண்டும்'' எனக் கூறினார்.
சுப்ரமணியசாமி அவதூறு
இவர்களின் வார்த்தை போர் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, ''பிரியங்கா அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் சாப்பிட்டிருப்பார் போலும். அதனால்தான் இவ்வாறு பேசி வருகிறார். பிரியாங்காவின் இந்த பேச்சு அவருக்கும், அவரது கணவருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது'' எனக் கூறினார்.
வீடு முற்றுகை
இதையடுத்து, சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிசார், டெல்லியில் உள்ள சுப்பிரமணிய சாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் காங்கிரஸ் தொண்டர்களை கலைத்தனர்.
போலீஸ் குவிப்பு
காங்கிரஸ் தொண்டர்களின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications