சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி விசாரிக்கும் அரசியல் சாசன வழக்குகள் லைவ் ஒளிபரப்பு- மத்திய அரசு சம்மதம்
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரிக்கும் அரசியல் சாசன வழக்குகளை முதல் கட்டமாக நேரலை செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு இருப்பதால், அரசியல் சாசனம் மற்றும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும்போது, அதை உச்சநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பாக காண்பிக்க வேண்டும், என்று, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை ஏற்பு
கடந்த 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது,, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம். தீபக் மிஸ்ரா கூறுகையில், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், தனது தரப்பு வழக்கறிஞர் எப்படி வாதிடுகிறார் என்பதை மனுதாரர் வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொள்ள, வழக்கு விசாரணையை நேரலை செய்வது உதவியாக இருக்கும் என்றார்.

தலைமை வழக்கறிஞர் கருத்து
மேலும், இந்த விஷயத்தில், பார் சங்கத்தின் பரிந்துரையையும் சுப்ரீம் கோர்ட் கேட்டது. ஜூலை 23ம் தேதி, அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் இதுகுறித்து விரிவான வழிகாட்டும் நெறிமுறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காலத்தின் கட்டாயம்
உச்சநீதிமன்ற விசாரணையை நேரலையாக காண்பிப்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது. முன்னதாக, வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தனது மனுவில், ஒருவேளை நேரலைக்கு வாய்ப்பு இல்லாவிட்டால், வழக்கு விசாரணையை வீடியோவாக பதிவு செய்யவாவது அனுமதி தர வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

மத்திய அரசு பதில்
இதையடுத்து மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பதிலில், அரசியல்சாசன விவகாரங்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும்போது மட்டும் அதை நேரலையாக ஒளிபரப்பலாம். வெள்ளோட்ட அடிப்படையில் அதிகபட்சம் 3 மாதங்கள் பார்த்து அதன்பிறகு ஆய்வு செய்து, அடுத்தகட்ட, நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications