நாடு எங்க போகுது..காருக்குள் பசு கடத்தலா? 12ஆம் வகுப்பு மாணவனை சுட்டு கொன்ற “பசு பாதுகாப்பு கும்பல்”
சண்டிகர் : வட மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களை கொடூரமாக அடித்து கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. இந்நிலையில் காரில் பசு கடத்தியதாக நினைத்து பனிரெண்டாம் வகுப்பு மாணவனை 25 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற பசு பாதுகாப்பு கும்பல் அவரை சுட்டுக்கொன்ற கொடூரம் ஹரியானாவில் அரங்கேறி இருக்கிறது.
உத்திரபிரதேசம், பீகார், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களை குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

பல இடங்களில் மாட்டுக்கறி சமைத்ததாகவும் விற்பனை செய்ததாகவும் இதுவரை பலர் கொடூரமாக அடித்தும் சுட்டும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவாகி இருந்தும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இஸ்லாமிய இளைஞரின் வீட்டில் மாட்டுக் கறியை வீசிவிட்டுச் சென்ற கும்பல் பின்னர் அவரின் வீட்டுக்கே சென்று மாட்டுக்கறி வைத்து இருந்ததாக கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வடமாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் மாட்டுக் கறியை ஏற்றுமதி செய்யும் நிலையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் சில கும்பல்கள் சுற்றித் திரிவதும் இளைஞர்கள் தாக்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
இப்படி ஒரு சம்பவம் தான் ஹரியானாவில் அரங்கேறி இருக்கிறது. பரிதாபாத் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அந்த பகுதியில் சிகப்பு கலர் ரெனால்ட் டஸ்டர் மற்றும் டொயோட்டா கார்களில் பசுக்கள் கடத்தப்படுவதாக பசு பாதுகாப்பு கும்பலுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சவுரப், வருண், கௌஷிக், கிருஷ்ணா, அணில் ஆகிய ஐந்து பேர் கொண்ட பசு பாதுகாப்பு கும்பல் சட்டவிரோதமாக துப்பாக்களுடன் படேல் சவுக் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ரெனால்ட் டஸ்டர் காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். துப்பாக்கிகளுடன் கும்பல் இருந்ததால் அந்த காரின் ஓட்டுனர் ஹர்ஷித், நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து அந்த கும்பல் காரின் மீது துப்பாக்கியால் சுட்டு உள்ளது. இதனால் பயந்து போன காரின் ஓட்டுனர் ஹர்ஷித் காரை வேகமாக இயக்கியுள்ளார். இருந்த போதும் அந்த காரை விடாமல் பசு பாதுகாப்பு கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே துரத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் கார் நின்ற நிலையில் காரில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் அந்த காரில் பயணம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவனான ஆரியன் மிஸ்ரா குண்டு பட்டு படுகாயம் அடைந்தார்.
மேலும் அவரது மார்பிலேயே அந்த கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து காருக்குள் எட்டிப் பார்த்தபோது அதில் பசுக்கள் ஏதுமில்லை. இதை அடுத்து தவறாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டோம் என்று அறிந்த அந்த பசு பாதுகாப்பு கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஆரியன் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனை உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பரிதாபாத் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட கிருஷ்ணா, அணில், கௌஷிக், வருண், சௌரப் ஆகிய ஐந்து பேரை கைது செய்து அவரது துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் தான் பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்த கொடூரம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. காயமடைந்த ஓட்டுனருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications