இந்தியாவில் சராசரியாக தினசரி 93 பெண்கள் பலாத்காரம்... 'பலாத்கார தலைநகரம்' டெல்லி!
டெல்லி: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களைப் பற்றிய புள்ளிவிபரங்களை படிக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்காக கண்களில் இருந்து கண்ணீர் கசிகிறது - சில நாட்கள் மட்டும்தான். பின்னர் அந்த சம்பவங்களைப் பற்றி நாம் மறந்து விடுகிறோம். சில தினங்களுக்கு முன்பு கால் டாக்ஸியில் பயணித்த 27 வயதான பெண்ணை அந்த டாக்ஸி ஓட்டுநரே பலாத்காரம் செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த கால்டாக்ஸி நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டுமுதல் 69000 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 16000 வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு கிடைத்துள்ளது. மீதமுள்ள பலாத்கார வழக்குகளுக்கு எந்த வித தீர்வும் கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை.

ஊடகங்களின் விழிப்புணர்வு
பலாத்கார சம்பவங்களைப் பற்றி செய்தி வெளியிடும் ஊடகங்களும் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள். பலாத்கார வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றங்கள் விசாரணை நடைபெறும் போது குற்றவாளிகளை பேட்டி எடுப்பது,அவர்களை பகிரங்கப்படுத்துவது என ஊடகங்கள் போட்டி போட்டு செயல்படுகின்றன. இது வழக்கின் தன்மையை பாதிக்கிறது.

பொய் வழக்குகள்
சில நேரங்களில் இந்த பலாத்கார புகார்கள் ஆண்களுக்கு எதிரானதாக இருக்கிறது. சில பெண்கள் மிரட்டலுக்காகவும் பலாத்கார புகார்களை கொடுப்பதாகவும் கூறுகிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர்.

அழுத்தம் தேவை
பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதோடு செயல்பாடுகள் முடிந்துவிடுவதில்லை. ஊடகங்கள் அமைச்சர்களுக்கும் அழுத்தம் கொடுக்கவேண்டும். காவல்துறையினரும் விரைந்து நடவடிக்கை எடுக்க ஊடகங்களும் உதவவேண்டும். இதன்மூலம் தவறிழைப்பவர்கள் தங்களின் பின்புலத்தால் தப்பமுடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
டெல்லி மாடல் அழகி ஜெஸிகாலால் கொலை வழக்கில் ஊடகங்களின் செயல்பாடு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த வழக்கில் மிகப்பெரிய அரசியல் பின்புலம் கொண்டவர்களின் வாரிசுகளுக்கு தண்டனை கிடைத்தது

தடை செய்தால் போதுமா?
இளம் பெண்ணை பலாத்காரம் செய்த உபேர் டாக்ஸி டிரைவரை கைது செய்த கையோடு அந்த நிறுவனத்தின் டாக்ஸி சேவைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிடுமா? ஒருநிறுவனத்தில் பணியில் சேர்க்கும் போது அந்த நபரின் பின்புலத்தை சரியாக ஆராய்வது அவசியம். ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.
எத்தனையோ பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். பெங்களூருவில் சமீபத்தில் பிபிஒ ஊழியர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். எஸ்ஆர் எஸ் என்ற நிறுவனத்தின் வாகனத்தில்தான் அந்த பெண் பயணித்தபோது இந்த சம்பவம் நடந்தது.
நள்ளிரவு வரை பணிபுரியும் பெண்களுக்கு அந்த நிறுவனம்தான் உரிய பாதுகாப்பை அளிக்கவேண்டும். பெண் ஊழியர்கள் தனியாக பயணிப்பதை தவிர்பதே பாதுகாப்பானது என்கின்றனர் நிபுணர்கள்.

புள்ளிவிபரம் சொல்வது என்ன?
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 93 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2012 அம் ஆண்டு 24,923 பெண்கள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டில் பலாத்கார சம்பவம் 33,707 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக உள்ளது.. 2012ம் ஆண்டில் டெல்லியில் 585 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். 2013ல் 1, 441 பேர் பலாத்காரம் செய்யப்பட்டுள்னர். 18 முதல் 30 வயதுக்குள் உள்ள பெண்களே அதிக அளவு ( 15 ஆயிரத்து 556 பேர்) பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications