குஜராத்தில் கரையை கடந்த அதிதீவிர புயல் டவ்-தே புயல்- வலுவிழந்து டையூ அருகே மையம் கொண்டுள்ளது!
போர்பந்தர்: அரபிக் கடலில் உருவான டவ்-தே அதிதீவிர புயலானது நேற்று இரவு 8.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வலுவிழந்து தீவிர புயலாக டையூ அருகே நிலை கொண்டுள்ளது.
அரபிக் கடலில் லட்சத்தீவுகள் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது அதிதீவிர புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டிருந்தது.
டவ்-தே புயல் உருவானது முதலே கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. கேரளாவில் பல பகுதிகளில் கடல்நீர் கொந்தளிப்புடன் வீடுகளுக்குள் நுழைந்தது. கேரளாவின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. இதேபோல் கர்நாடகாவின் 200க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கர்நாடகாவின் டவ்-தே புயலின் கோரதாண்டவத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிராவில் பாதிப்பு
டவ்-தே புயலானது அரபிக் கடலில் நகர்ந்து குஜராத்தை நோக்கி சென்றது. இதனால் மகாராஷ்டிரா மாநிலமும் மிக கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. மும்பையில் நேற்று பலத்த காற்று வீசியதால் விமான சேவைகள் பகல் முழுவதும் ரத்து செய்யப்பட்டன. மகாராஷ்டிராவில் புயலில் சிக்கி 8 பேர் பலியாகினர்.
திங்கள்கிழமை இரவு கரையை கடந்தது
குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் டையூவுக்கு இடையே நேற்று இரவு 8.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது டவ்-தே புயல். இன்று அதிகாலை 2.30 மணியளவில் டவ்-தே புயல் முழுமையாக் கரையை கடந்ததாக வானிலை மையம் அறிவித்தது.
மின்சாரம், செல்போன் சேவைகள் பாதிப்பு
இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் குஜரத்தின் கடலோர பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. செல்போன் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. டவ்-தே புயல் கரையை கடப்பதற்கு முன்னதாகவே குஜராத்தில் சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் ஏற்கனவே தேசியர் பேரிடர் மீட்பு குழுக்களும் முகாமிட்டிருந்தன.
வலுவிழந்த நிலையில்..
தற்போதைய நிலையில் டவ்-தே புயல் வலுவிழந்து தீவிர புயல் என்ற நிலையில் டையூ அருகே 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.