ஒடிசா கூலித் தொழிலாளியின் மகள் ஐ.இ.எஸ் தேர்வில் 13வது இடம் பிடித்து சாதனை!
கேந்திரபாரா: ஒடிசா கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் யு.பி.எஸ்.சி நடத்திய இந்திய பொருளாதார சேவைக்கான தேர்வில் அகில இந்திய அளவில் 13 ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள மகாநங்கலா கிராமத்தைச் சேர்ந்தவர் அமுல்யா குமார் பெகேரா. இவர் பாரதீப்பில் உள்ள ஒரு உரத்தொழிற்சாலையில் தினக்கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

இவரது மகள் அபராஜிதா பிரியதர்ஷினி பெகரா. இவர் சிறு வயதில் இருந்தே படிப்பில் படுசுட்டியாக திகழ்ந்துள்ளார். இதனால், பொருளாதார சிக்கலையும் பொருட்படுத்தாமல் அவரை தொடர்ந்து படிக்குமாறு தந்தை அமுல்யா குமார் ஊக்கம் அளித்துள்ளார்.
அதற்கேற்ப தொடர்ந்து படிப்பில் முன்னேறி, உத்கல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரவியல் முதுகலைப் பட்டம் பெற்ற அபராஜிதா, பின்னர் தீவிர முயற்சி மேற்கொண்டு இந்திய பொருளாதார சேவைக்கான எழுத்துத்தேர்வு எழுதினார்.
சமீபத்தில் இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், அபராஜிதா அகில இந்திய அளவில் 13 ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து அபராஜிதா கூறுகையில், "நான் படிப்பதற்கு ஊக்கம் அளித்தது என் தந்தைதான். எனக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். என் படிப்பிற்கு செலவு செய்வதற்காக அவர் வியர்வை சிந்தி உழைத்தார். வறுமையை நினைத்து ஒருபோதும் அவர் வேதனை அடைந்தது இல்லை. அவரால்தான் நான் இன்று சாதனை படைத்துள்ளேன். எனக்கு கிடைக்கப்போகும் அகில இந்திய பணியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்" என்றார்.
யு.பி.எஸ்.சி. நடத்திய இந்திய பொருளாதார மற்றும் இந்திய புள்ளியியல் சேவைக்கான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் இந்தாண்டும் பெண்களே ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications