தயாளு ஜாமீனுக்கு ஆட்சேபம் இல்லை! ஆ.ராசா, கனிமொழியை விடுவிக்க அமலாக்கப் பிரிவு கடும் எதிர்ப்பு!!
டெல்லி: கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபம் இல்லை என்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்றும் அமலாக்கத் துறை வாதிட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்காக ஸ்வான் நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி பணம் கொடுத்தது; இந்த பணப் பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டுள்ளது என்பது அமலாக்கப் பிரிவு வழக்கு.
இந்த வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி. முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, ஸ்வான் பல்வா உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 தனியார் நிறுவனங்கள் நீங்கலாக 10 பேரும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன் மீதான குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முடிவடைந்து அமலாக்கத் துறை தரப்பு வாதம் நேற்று நடைபெற்றது.
தயாளுக்கு ஜாமீன் - ஆட்சேபம் இல்லை
அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞர் யு.யு. லலித் வாதிட்டதாவது:
வயோதிகம், உடல் நலக் குறைவு காரணமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தயாளு அம்மாள் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை அமலாக்கத் துறை ஆட்சேபிக்கவில்லை. அதை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று தெரிவிக்க விரும்புகிறது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள கரீம் மொரானி தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். அவரது உடல் நிலை பற்றி அமலாக்கத் துறைக்கு தெரியாது. முறைப்படி அவரை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தி அதன் அடிப்படையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது பற்றி முடிவு எடுக்கலாம்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்ற எட்டு பேரையும் ஜாமீனில் விடுவிக்க அமலாக்கத் துறை ஆட்சேபம் தெரிவிக்கிறது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி, ஆ. ராசா, அமிர்தம் உள்ளிட்டோர் சார்பிலும் அமலாக்கத் துறையின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இதையடுத்து, அனைவரது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நாளை மறுநாளைக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி ஒத்திவைத்தார்.
அமலாக்கப் பிரிவு எதிர்ப்பு தெரிவிக்காததால் தயாளு அம்மாளுக்கு ஜாமீன் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.