இந்த சின்னம்மாவை மறந்துடாதீங்க தெலுங்கானா புள்ளைகளா: சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: தெலுங்கானா தனிமாநிலம் ஆக சோனியா அம்மா மட்டும் அல்ல இந்த சின்னம்மாவும் தான் காரணம் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் ஆகப் போகிறது. இது குறித்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முயற்சியாலேயே தெலுங்கானா தனிமாநிலமாக்கப்படுகிறது. என்ன ஆனாலும் சரி ஆந்திரா இரண்டாக பிரிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தெலுங்கானா தனி மாநிலமாக்கப்பட்டால் சீமாந்திராவில் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஆந்திராவை பிரிக்க காங்கிரஸ் காலதாமதம் செய்தது. கடந்த 2004ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட சோனியா தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அவர் தனது வாக்குறுதியை 10 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கானா மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
தெலுங்கானா குழந்தைகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு தனி மாநிலம் கிடைக்க சோனியா அம்மா மட்டும் அல்ல இந்த சின்னம்மாவும் தான் காரணம் ஆகும் என்றார்.
அவர் சின்னம்மா என்று தன்னைத் தானே தெரிவித்துள்ளார்.